ஒரே நாளில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ரூ.1.13 கோடி அபராதம்: மும்பை போலீஸ் 'சுறுசுறு'

மும்பை: மும்பையில் தஹி தண்டி யாத்திரையின் போது விதிகளை மீறியதாக வாகன ஓட்டிகளுக்கு மொத்தம் ரூ.1.13 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.



தஹி ஹண்டி என்பது கிருஷ்ணரின் பிறப்பை கொண்டாடும் இந்து பண்டிகையான கிருஷ்ண ஜெயந்தியுடன் தொடர்புடைய ஒரு போட்டி நிகழ்வு ஆகும். கிருஷ்ண ஜெயந்திக்கு அடுத்த நாள் நடைபெறும் இந்நிகழ்வு வட மாநிலங்களில் மிகவும் பிரசித்தம். குறிப்பாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.


சிறப்பாக கொண்டாடப்பட்ட இந்நிகழ்வின் போது மும்பையில் மட்டும் போக்குவரத்து விதிமீறல்களுக்காக போலீசார் 10,000க்கும் மேற்பட்ட இ சலான்களில் அபராதம் விதித்துள்ளனர். இதன் மூலம் வாகன ஓட்டிகளுக்கு கிட்டத்தட்ட ரூ.1.13 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.


ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டியது, தவறான திசையில் செல்லுதல், அதி வேகமாக வாகனத்தை இயக்குவது போன்ற விதிமீறல்களுக்கு விதிக்கப்பட்ட அபராதமே அதிகம்.


இதுகுறித்து போக்குவரத்து இணை கமிஷனர் அனில் கும்பாரே கூறியதாவது;


விதிகளை மீறுவோர் யார் என்பதை கண்டறிவதற்காக பல்வேறு இடங்களில் ஏராளமான சிசிடிவி கேமராக்களை பொருத்தி வைத்துள்ளோம். அவற்றை ஸ்கேன் செய்து வேறு யார், யார் எல்லாம் விதிகளை மீறி இருக்கின்றனர் என்று கண்டறியப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.


இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement