மனித குலத்திற்கான சேவையாக இருக்கும்; ரஷ்ய அதிபர் புடினுக்கு மெலனியா டிரம்ப் கடிதம்

15

வாஷிங்டன்: உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்த வலியுறுத்தி ரஷ்ய அதிபர் புடினுக்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் கடிதம் எழுதியுள்ளார்.


உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அண்மையில் ரஷ்ய அதிபர் புடினை அதிபர் டிரம்ப் சந்தித்து பேசினார். இந்தப் பேச்சில் எந்த உடன்பாடும் ஏற்படா விட்டாலும், ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை என்று இருதரப்பினரும் கூறினர்.


இந்த சந்திப்பின் போது, மெலனியா எழுதிய அமைதிக்கான கடிதத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புடினிடம் கொடுத்துள்ளார். அதனைப் பெற்றுக் கொண்ட புடின், இருநாட்டு அதிகாரிகள் முன்னிலையில் அதனை படித்துள்ளார்.


அந்தக் கடிதத்தில்; ஒவ்வொரு குழந்தையின் இதயத்திலும் அமைதியான ஒரு கனவு உள்ளது. ஒரு நாட்டின் எந்தப் பகுதியில் பிறந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்களின் அன்பு, வாய்ப்பு மற்றும் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது. பெற்றோர்களாக, அடுத்த தலைமுறையின் நம்பிக்கையை வளர்ப்பது நமது கடமை. தலைவர்களாக, நம் குழந்தைகளின் வாழ்வை பேணும் பொறுப்பு சிலரின் வசதிக்கு அப்பாற்பட்டது.


எல்லோருக்கும் கண்ணியமான உலகை உருவாக்க நாம் உறுதியாக பாடுபட வேண்டும். இன்றைய உலகில், சில குழந்தைகள் இருள் சூழ்ந்த சூழலில், அமைதியான சிரிப்பை கட்டாயப்படுத்தி சுமக்கிறார்கள். அவர்களின் எதிர்காலத்தை கைப்பற்றக்கூடிய சக்திகளுக்கு எதிரான ஒரு மௌனமான எதிர்ப்பு தான் அது.

புடின், நீங்கள் தனியாக அவர்களின் சிரிப்பை மீட்டெடுக்க முடியும். அப்பாவி குழந்தைகளை பாதுகாக்கும் போது, நீங்கள் ரஷ்யாவுக்கு மட்டும் சேவை செய்யமாட்டீர்கள், மனிதகுலத்திற்கே சேவை செய்வீர்கள். இந்த செயலை இன்று ஒரு பேனாவை நீங்கள் சுழற்றுவதன் மூலம் சாத்தியப்படுத்தலாம். இதுவே நேரம், எனக் குறிப்பிட்டுள்ளார்

Advertisement