கால்பந்து ரசிகர் மரணம்: பிரிமியர் லீக் போட்டியில் சோகம்

லண்டன்: பிரிமியர் லீக் கால்பந்து போட்டியின் போது பிரைட்டன் அணி ரசிகர் ஒருவர் மரணமடைந்தார்.

இங்கிலாந்தில், பிரிமியர் லீக் கால்பந்து 34வது சீசன் நடக்கிறது. பிரைட்டன் அண்ட் ஹோவ் நகரில் நடந்த லீக் போட்டியில் பிரைட்டன், புல்ஹாம் அணிகள் மோதின. இப்போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது.
போட்டியின் போது மைதானத்தில் அமர்ந்திருந்த 72 வயதான பிரைட்டன் அணி ரசிகர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு சி.பி.ஆர்., உள்ளிட்ட மருத்துவ முதலுதவி அளித்த போதும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இச்சம்பவத்தின் போது போட்டியை பாதியில் நிறுத்தாமல், தொடர்ந்து நடத்தியது சர்ச்சை ஏற்படுத்தியது.


இதுகுறித்து பிரைட்டன் கிளப் அணியின் தலைமை நிர்வாகி, துணை தலைவர் பால் பார்பர் கூறுகையில், ''இச்சம்பவம் நம்பமுடியாத சோகமான முடிவாக அமைந்தது. மரணமடைந்த நபரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அணி நிர்வாகம் துணையாக நிற்கும்,'' என்றார்.

மற்றொரு அதிகாரி ஒருவர் கூறுகையில், ''பிரைட்டன் அணியின் மருத்துவ குழு, சசக்ஸ் காவல்துறை, பிரிமியர் லீக் நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து போட்டியை தொடர முடிவு செய்தோம். ஒருவேளை போட்டியை பாதியில் நிறுத்தியிருந்தால், மைதானத்தில் இருந்த மற்ற ரசிகர்களின் கவனம் சம்பவ இடத்தின் மீது சென்றிருக்கும். இதனால் மருத்துவ குழுவினரின் முயற்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம்,'' என்றார்.

Advertisement