இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடமிருந்து மீண்டும் கொள்முதல் தள்ளுபடி விலையில் கிடைப்பதால் ஆர்டர்

புதுடில்லி:ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தள்ளுபடி அதிகரித்துள்ளதால், பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள், வரும் செப்டம்பர், அக்டோபர் மாதத்துக்கான கச்சா எண்ணெய் கொள்முதலில் ஆர்வமுடன் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்குவதை, அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சித்த நிலையில், கடந்த ஜூலையில், நம் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலை தற்காலிகமாக நிறுத்தி இருந்தன.

ஏற்கனவே, இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பு அமலான நிலையில், வரும் 27ம் தேதி முதல் கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்திருந்தார். எனினும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், தற்போது ரஷ்யாவின் யூரல்ஸ் கச்சா எண்ணெய் விலை, முன்பை விட பேரல் ஒன்றுக்கு மூன்று அமெரிக்க டாலர் வரை தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

பிற சந்தைகளோடு ஒப்பிடுகையில், குறைந்த விலையில் கிடைப்பதால், இந்திய எண்ணெய் நிறுவனங்களை இது கவர்ந்து உள்ளது.

சீனாவும், ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலை அதிகரித்து உள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், வழக்கமான யூரல்ஸ் கச்சா எண்ணெய்யுடன், 'சைபீரியன் லைட்' உள்ளிட்ட பிற வகை கச்சா எண்ணெய் கொள்முதலிலும் ஈடுபட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


@block_B@

யூரல்ஸ் கச்சா எண்ணெய்




ரஷ்யாவின் மொத்த கச்சா எண்ணெய் ஏற்று மதியில், யூரல்ஸ் கச்சா எண்ணெய் பங்கு மிக அதிகமாக உள்ளது. இந்த கச்சா எண்ணெய், உலகளாவிய சந்தையில் விற்கப்படும் கச்சா எண்ணெய்யை விட சற்று கனமானது மற்றும் அதிக கந்தகத்தைக் கொண்டது. இதனை சுத்திகரிப்பது சற்று கடினம்.


எனினும், பல்வேறு வகையான கச்சா எண்ணெய்களைக் கையாளும் வகையில், தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக, தள்ளுபடி விலையில் கிடைக்கும் யூரல்ஸ் கச்சா எண்ணெய்யை இந்தியா அதிக அளவில் இறக்குமதி செய்கிறது. உக்ரைன் மீதான போருக்கு பின்னர், சர்வதேச சந்தையில், யூரல்ஸ் கச்சா எண்ணெய் தள்ளுபடி விலையில் விற்கப்படுகிறது.block_B

Advertisement