ஐஸ்வரி பிரதாப் 'தங்கம்': ஆசிய துப்பாக்கி சுடுதலில்

ஷிம்கென்ட்: ஆசிய துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் (50 மீ., 'ரைபிள்-3' பொஷிஷன்) தங்கம் வென்றார்.

கஜகஸ்தானில், ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 16வது சீசன் நடக்கிறது. ஆண்களுக்கான தனிநபர், 50 மீ., 'ரைபிள்-3 பொஷிஷன்' பிரிவு தகுதிச் சுற்றில் அசத்திய இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (584.28 புள்ளி), செயின் சிங் (582.28), அகில் ஷியோரன் (581.31) முறையே 3, 6, 8வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர்.

அடுத்து நடந்த பைனலில் ஐஸ்வரி பிரதாப் சிங், 462.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இது, ஆசிய சாம்பியன்ஷிப் அரங்கில் ஐஸ்வரி பிரதாப் சிங் கைப்பற்றிய 3வது தங்கம், 9வது பதக்கம். இதுவரை 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் கைப்பற்றி உள்ளார்.
மற்ற இந்திய வீரர்களான செயின் சிங் (435.7 புள்ளி), அகில் (424.9) முறையே 4, 5வது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தனர்.


ஆண்கள் அணிகளுக்கான 50 மீ., 'ரைபிள்-3 பொஷிஷன்' பிரிவில் ஐஸ்வரி பிரதாப் சிங், செயின் சிங், அகில் ஷியோரன் அடங்கிய இந்திய அணி, 1747.87 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றது.

அட்ரியன் 'தங்கம்': ஜூனியர் ஆண்களுக்கான தனிநபர் 50 மீ., 'ரைபிள்-3 பொஷிஷன்' பிரிவில் இந்தியாவின் அட்ரியன் கர்மாகர் (463.8 புள்ளி) தங்கம் கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீரர் வேதாந்த் நிதின் (448.8) வெண்கலம் வென்றார்.
ஜூனியர் ஆண்கள் அணிகளுக்கான 50 மீ., 'ரைபிள்-3 பொஷிஷன்' பிரிவில் வேதாந்த் நிதின், அட்ரியன், ரோகித் கன்யான் அடங்கிய இந்திய அணி, 1733.69 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றது.

Advertisement