இந்தியா இதை மட்டும் செய்தால் நாளையே 25% வரி ரத்து: கொக்கரிக்கும் அமெரிக்கா!

38


வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், நாளையே இந்திய பொருள்களுக்கான வரி 25% குறைக்கப்படும் என வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ தெரிவித்துள்ளார்.


இந்திய பொருட்கள் மீதான அமெரிக்க இறக்குமதி வரி 50 சதவீதமாக உயர்ந்து இருப்பது கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் எதிர்க்கட்சியினரே இந்த அதிக வரி விதிப்பை எதிர்க்கின்றனர். இது தொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகையின் மூத்த மற்றம் உயர்மட்ட வர்த்தக ஆலோசகராக இருக்கும் பீட்டர் நவரோ கருத்து தெரிவித்துள்ளார்.

வர்த்தகம் மற்றும் உற்பத்தி தொடர்பான ஆலோசனையை அதிபர் டிரம்புக்கு வழங்கும் முக்கிய நபர் இவர் தான். இவர் அளித்த பேட்டி விபரம் பின்வருமாறு:
‛உக்ரைன்-ரஷ்யா போர் அடிப்படையில் மோடியின் போர் தான். காரணம், இன்று அமைதிக்கான பாதை டில்லியின் வழியாக தான் செல்கிறது.


ரஷ்யாவிடம் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி போர் இயந்திரத்துக்கு இந்தியா உதவுகிறது. அந்த பணத்தை வைத்து தான் உக்ரைனியர்களை ரஷ்யா கொன்று குவிக்கிறது.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், நாளைக்கே இந்தியா மீது விதித்த வரியில் 25 சதவீதத்தை தள்ளுபடி செய்வோம்.


ஆனால் அவர்களை பாருங்கள். ஜனநாயக நாடுகளுடன் சாய்வதற்கு பதில், சர்வாதிகாரிகளுடன் கரம் கோர்க்கிறார்கள். பல காலமாக சீனாவுடன் போரில் ஈடுபட்டு இருக்கிறீர்கள். அக்சாய் சின் மற்றும் உங்களில் பல பிரதேசங்களை சீனா ஆக்கிரமித்தது.

சீனா உங்கள் நண்பன் அல்ல. ரஷ்யாவும் அப்படி தான். இந்தியாவை நினைத்தால் குழப்பமாக இருக்கிறது. மோடி ஒரு சிறந்த தலைவர். ஜனநாயக நாடு இந்தியா. அவர்களா இப்படி இருக்கிறார்கள் என்பது தான் குழப்பமாக இருக்கிறது. இந்தியா மீதான வரிவிதிப்பால் அமெரிக்கர்கள் தங்களது வருமானம், வேலைகளை இழக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement