நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் 7,072 ஊழல் வழக்குகள்!

7


புதுடில்லி: சிபிஐ விசாரித்து வரும் 7,072 ஊழல் வழக்குகளின் விசாரணை பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

2024ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, மொத்த வழக்குகளில் 1,506 வழக்குகள் மூன்று ஆண்டுகளுக்கும் குறைவாகவும், 791 வழக்குகள் மூன்று ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளுக்குள் நிலுவையில் உள்ளன. 2,115 வழக்குகள் ஐந்து ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளுக்குள் நிலுவையில் இருக்கின்றன. 2,281 ஊழல் வழக்குகள் 10 முதல் 20 ஆண்டுகள் வரையும், 379 வழக்குகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாகவும் நிலுவையில் உள்ளன.



இந்த அறிக்கையின்படி, சிபிஐ மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்த மொத்தம் 13,100 மேல்முறையீடுகள் வெவ்வேறு உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. 2024 ஆம் ஆண்டில், 644 வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட்டன. இவற்றில், 392 வழக்குகளில் குற்றவாளிகள் தண்டனை பெற்றனர். 154 வழக்குகளில் விடுதலை செய்யப்பட்டனர். 21 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. கடந்த 2004ம் ஆண்டு குற்றத்தீர்ப்பு விகிதம் 69.14 சதவீதமாக இருந்தது. இது 2023ல் 71.47 சதவீதமாக இருந்தது.


2024ம் ஆண்டில், சிபிஐ 1,005 வழக்குகளில் விசாரணைகளை நிறைவு செய்தது. இதில் 856 வழக்குகள் மற்றும் 149 முதற்கட்ட விசாரணை வழக்குகள் அடங்கும். 2024 முடிவில், மொத்தம் 832 வழக்குகள் நிலுவையில் இருந்தன. 2024ம் ஆண்டில், சிபிஐ ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 502 வழக்குகளைப் பதிவு செய்தது. 859 அரசு ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, என்று மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisement