செரப்பனஞ்சேரி ஏரியில் அத்துமீறி கட்டட கழிவுகள் கொட்டி அட்டூழியம்

ஸ்ரீபெரும்புதுார்:செரப்பனஞ்சேரி ஏரியில் அத்துமீறி கொட்டப்படும் கட்டட கழிவுகளால், ஏரி துார்ந்து வருவதாக, பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குன்றத்துார் ஒன்றியம், செரப்பனஞ்சேரி ஊராட்சியில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில், 350 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது.

இந்த ஏரிநீரை பயன்படுத்தி இப்பகுதியில் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகிறது. அத்துடன், அப்பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.

இந்த நிலையில், வண்டலுார் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இந்த ஏரியில், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோழி இறைச்சி கடைகளில் இருந்து, இரவு நேரங்களில் மூட்டை, மூட்டையாக இறைச்சி கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டுகின்றனர். இதனால், ஏரி நீர் மாசடைந்து வருகிறது.

அதேபோல, காரணிதாங்கலில் இருந்து, பேரிஞ்சம்பாக்கம் சாலையோரம் உள்ள ஏரியில், மர்ம நபர்கள் கட்டட கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால், ஏரி துார்ந்து வருகிறது.

எனவே, ஏரியில் கொட்டப்பட்டுள்ள இறைச்சி மற்றும் கட்டட கழிவுகளை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, கழிவுகளை அப்புறப்படுத்தி நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement