கரூர் சம்பவத்தில் யாரும் அரசியல் ஆதாயம் தேடக்கூடாது; திருமா

33

கரூர்: கரூர் சம்பவத்தில் யாரும் அரசியல் ஆதாயம் தேடக்கூடாது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இன்னும் கூடுதலாக நிதி உதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் முன் வர வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.



கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவர், காயமடைந்தவர்களையும் மருத்துவமனையில் நேரில் சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: இந்த துயரம் மறக்க முடியாதது. ஆற்றுப்படுத்தி கொள்ள முடியாத பெருந்துயரம். இதுவரை எத்தனையோ தலைவர்கள் தமிழகத்தில் லட்சக்கணக்கானவர்களை திரட்டி பேரணி மற்றும் தேர்தல் பிரசாரம் போன்றவற்றை நடத்தி இருக்கிறார்கள்.


அப்போதெல்லாம் நிகழாத, தமிழக அரசியல் வரலாற்றில் இப்படி ஒரு துயரம் நடந்தேறி இருப்பது என்பது கவலையளிக்கிறது. இதனை கேள்விப்பட்ட உடனே நள்ளிரவில் கரூருக்கு வருகை தந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளவர்கள் எல்லாவற்றையும் பார்த்து முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் சொல்லி இருக்கிறார். அதேபோல் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினரையும் மருத்துவமனை வளாகத்தில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து இருக்கிறார்.


அவரது இந்த விரைவான நடவடிக்கை அதிர்ச்சியில் உறைந்து இருக்கும் நம் போன்றவர்களுக்கு ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது. அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.ஒரு லட்சமும் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவித்துள்ளார். விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதலாக நிதி உதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் முன் வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுகிறோம். இது வந்து கூட்ட நெரிசலில் நடந்த ஒரு துயர சம்பவம், இதனை விபத்து என்று மட்டுமே சொல்ல முடியும்.


இதற்கு உள்நோக்கம் கற்பிக்கிற முயற்சி, வேண்டுமென்று அரசியல் ஆதாயம் தேட விரும்புவதாக தான் கருத வேண்டி உள்ளது. இதில் யாரும் அரசியல் உள்நோக்கத்தோடு கருத்துச் சொல்வதோ அல்லது செயல்படுவதோ ஏற்புடையது அல்ல. நடிகர் விஜய் தான் காரணம் என்று சொல்வதோ, போலீசார் தான் காரணம் என்று சொல்வதோ, பிரச்னைகளை திசை திருப்ப வேண்டியதாக தான் அமையும்.


பாதிக்கப்பட்டவருக்கு அது எந்த வகையிலும் பயன்படாது. இதுபோன்ற நிகழ்வுகள் பிற்காலத்தில் நடக்க விடாமல் தடுக்க வேண்டியதற்கும் உதவாது. இதில் அரசியல் விளையாட்டு தேவை இல்லை என்பது என்னுடைய கருத்து. அரசியல் கட்சிகளின் பிரசாரத்திற்கு வரம்புகளை வகுக்க வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Advertisement