2023ல் சைபர் குற்றங்கள் 31 சதவீதம் அதிகம்; தேசிய குற்றப்பதிவு ஆவண காப்பகம் தகவல்

புதுடில்லி : 'நம் நாட்டில், 2022ம் ஆண்டைவிட 2023ல், 'சைபர்' குற்றங்கள் எனப்படும், 'ஆன்லைன்' வாயிலாக நடக்கும் குற்றங்கள், 31.2 சதவீதம் அதிகரித்துள்ளது; தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் முதியோருக்கு எதிரான குற்றங்கள் அதிகளவு பதிவாகியுள்ளன' என, தேசிய குற்றப் பதிவு ஆவண காப்பக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அறிக்கை நாடு முழுதும் பதிவாகும் குற்றங்களை அடிப்படையாக வைத்து ஆண்டறிக்கையை மத்திய அரசின் தேசிய குற்றப் பதிவு ஆவண காப்பகம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன் விபரம்:


நாடு முழுதும், 2023ல் 62,41,569 குற்றங்கள் பதிவாகின. இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் 37,63,102 குற்றங்களும், சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்கள் கீழ், 24,78,467 குற்றங்களும் பதிவாகின.




கடந்த, 2022ல், 58,24,946 குற்றங்கள் பதிவான நிலையில், 2023ல் 7.2 சதவீதம் அதிகரித்துள்ளது. 2022ல் பெண்களுக்கு எதிராக 4.45 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.



இது, 2023ல் 0.4 சதவீதம் அதிகரித்து 4.48 லட்சம் வழக்குகளாக பதிவாகியுள்ளன.
அதில், 88,605 கடத்தல் வழக்குகளும், 83,391 தாக்குதல் வழக்குகளும், 66,232 போக்சோ வழக்குகளும் பதிவாகி உள்ளன.




நாட்டில், 2022ல் 28,522 கொலை வழக்குகள் பதிவான நிலையில், 2023ல் அது, 2.8 சதவீதம் குறைந்து, 27,721 வழக்குகளாக பதிவாகியுள்ளது. 2022ல் 65,893 சைபர் குற்றங்கள் பதிவான சூழலில், 2023ல் 31.2 சதவீதம் அதிகரித்து, 86,420ஆக பதிவாகியுள்ளது.



விவசாயிகள் கடந்த 2022ல் பழங்குடியினருக்கு எதிராக 10,064 குற்றங்கள் பதிவாகின. 2023ல், இது, 28.8 சதவீதம் அதிகரித்து 12,960 வழக்குகள் பதிவாகியுள்ளன.



2023ல், 1.71 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதில், 4,690 பேர் விவசாயிகள். விவசாய துறையில் தற்கொலை செய்து கொண்டவர்களில் 38.5 சதவீதம் பேர் மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள். தமிழகத்தை சேர்ந்த 5.9 சதவீதத்தினர் 2023ல் தற்கொலை செய்துள்ளனர்.



வேலையில்லாத காரணத்தால் 14,234 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதில், கேரளாவில் 15.4 சதவீதத்தினரும், மஹாராஷ்டிராவில் 14.5 சதவீதம் பேரும், தமிழகத்தில் 11.2 சதவீதம் பேரும், உத்தர பிரதேசத்தில் 9.1 சதவீதத்தினரும் அடங்கும்.



கடந்த, 2022ல், முதியவர்களுக்கு எதிரான குற்றங்கள், 28,545 ஆக பதிவான நிலையில், 2023ல் 27,886 ஆக குறைந்துள்ளது. இதில், தமிழகத்தில் 2,104 வழக்குகள் பதிவாகி உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement