இடவசதியில்லை; சாக்கு பைகளுக்கு தட்டுப்பாடு பல மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிறுத்தம்

சென்னை: இடவசதி இல்லாதது மற்றும் சாக்குப் பைக்கு தட்டுப்பாடு என, பல்வேறு காரணங்களை கூறி, பல மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில், 60 ஆண்டு களில் இல்லாத வகையில், நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது. விவசாயிகள் வசதிக்காக, மாநிலம் முழுதும், 1,728 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.

பயன் பெற்றனர் கடந்த, 10ம்தேதி நிலவரப்படி, 7.02 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, 97,125 விவசாயிகள் பயன் பெற்றுஉள்ளனர்.

அரசியல் செல்வாக்கு பெற்றவர்கள், பெரிய விவசாயிகள் மட்டுமே, தங்கு தடையின்றி, நெல் மூட்டைகளை விற்று பணமாக்கி வருகின்றனர்.

மற்ற விவசாயிகள், பல மாவட்டங்களில் நெல் மூட்டைகளுடன் கிடங்குகளுக்கு வெளியே காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், 'நெல் கொள்முதல் செய்ய, 2.65 கோடி சாக்கு பைகள், சணல் பைகள் கையிருப்பில் உள்ளன.

'டெல்டா மாவட்டங்களில் மட்டும், தினமும், 35 ஆயிரம் டன் நெல், வெளிமாவட்ட கிடங்களுக்கு நகர்த்தப்படுகிறது' என, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சமீபத்தில் கூறியிருந்தார்.

ஆனால், சாக்கு பைகள் தட்டுப்பாடு, அரவைக்கு அனுமதிக்கப்பட்ட அரிசி ஆலைகள் மற்றும் நெல் சேமிப்பு கிடங்குகளில் இடவசதி இல்லை எனக்கூறி, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில், நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால், விவ சாயிகள் அதிர்ச்சி அடைந்து உ ள்ளனர்.

இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட விவசாய சங்க தலைவர் ஜே.ஆஞ்சநேயலு கூறியதாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில், ஒரு வாரமாகவே நெல் கொள்முதலில் பிரச்னை நீடித்து வருகிறது. இடவசதி இல்லை; சாக்கு பை இல்லை என மாவட்ட அதிகாரிகள் காரணம் கூறி வருகின்றனர்.

வேகமெடுக்கும் இதுகுறித்து உணவுத்துறை இயக்குநர், வேளாண்துறை செயலரிடம் முறையிடப்பட்டது, இதையடுத்து, சென்னையில் இருந்து புதிய சாக்கு பைகள் எடுத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.

இன்று முதல் நெல் கொள்முதல் வேகப்படுத்தப்படும் என, மாவட்ட அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

தொடர்ந்து, 15 நாட்கள் கொள்முதல் செய்தால் பணியை முடித்து விடலாம். அதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement