கருவில் இருந்து கலெக்டர் வரை





வறட்சிக்குப் பெயர் பெற்ற ராமநாதபுரம் மாவட்டம் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் இன்னும் கடுமையான வறட்சியில்தான் இருந்தது.அப்போது குடிநீரைப் பெற பெண்கள் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டியிருந்தது.
Latest Tamil News
அப்படி ஒரு பெண், நான்கு மாதக் கர்ப்பத்துடன், தலையிலும் இடுப்பிலும் தண்ணீர் சுமந்து வீடு திரும்பும் வழியில் ஒரு வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது.கீழே விழுந்த பெண்ணின் மார்பெலும்பு முறிந்தது; உடம்பெங்கும் ரத்தக் காயம். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
Latest Tamil News
மருத்துவர்கள் பரிசோதித்தபோது,“இவ்வளவு பெரிய விபத்து! நீ பிழைத்ததே பெரிய விஷயம். உன் வயிற்றில் உள்ள கரு கலைந்திருக்கும். கலையாமல் இருந்தாலும் அது உயிருடன் பிறக்காது; உயிருடன் வந்தாலும் ஊனத்துடன் தான் பிறக்கும்.மேலும் அது இருக்கும் வரை உன் உயிருக்கும் ஆபத்து ஆகவே கண் முன் தெரியும் பெரிய உயிரான உன் உயிரையும் காக்க வேண்டும் கருவை கலைத்துவிடுகிறோம்'என்றனர்.

ஆனால் அந்தத் தாய் உறுதியாக,“என் கருவை நான் கலைக்க மாட்டேன். இந்தக் கருவால் என் உயிர் போனாலும் போகட்டும். அது எப்படிப் பிறந்தாலும்,இருந்தாலம் நான் தாங்கிக் கொள்வேன்,”என்று தீர்க்கமாக தெரிவித்தார்.

எலும்பு முறிவு என்ற உள்காயத்திற்கும், அடிபட்ட இடம் என்ற வெளிகாயத்திற்கும் சிகிச்சை எடுத்துக்கொண்டபடியே குழந்தையைப் பெற்றெடுத்தார்.அந்தக் குழந்தை குறைந்த எடையுடன் பிறந்ததால் அந்தத் தாய் தன் தாய்ப்பாலையே மருந்தாகவும் உணவாகவும் கொடுத்து வளர்த்தார்.

அறிவே தன் ஆயுதம் என்பதைப் புரிந்துகொண்ட அந்தக் குழந்தை எந்தப் படிப்பைப் படித்தாலும் அதில் தன் சிறப்பை வெளிப்படுத்தியது.கிராமத்து மாணவன் — அரசு பள்ளியில் படித்தவன் — ஆங்கிலம் சரியாகப் பேசத் தெரியாது; நல்ல புத்தகம் வாங்கப் பணம் இல்லை —என்ற அனைத்து தடைகளையும் உடைத்து படிக்கட்டுகளாக்கினான்.

அந்த மாணவன் — ராம் பிரசாத் மனோகர்.

கடுமையாகப் படித்து முதலில் கால்நடை மருத்துவரானார். அதிலிருந்து தொடர்ந்து முயன்று I.F.S, பின்னர் I.P.S, அதன் பிறகு I.A.S அதிகாரியாக உயர்ந்தார்.

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்ட கலெக்டர் உள்ளீட்ட பல உயர்பதவிகளில் சிறப்பாக பணியாற்றியவர். தற்போது பெங்களூரு மாநகராட்சியின் குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் தலைவர் (Chairman) ஆக உள்ளார்.

தான் வகித்த ஒவ்வொரு பதவியிலும் சிறந்த பங்களிப்பை வழங்கியதன் மூலம், அகில இந்திய அளவில் பாராட்டு மற்றும் பரிசுகளைப் பெற்றுள்ளார்.“அதிகாரம் அனைத்தும் மக்கள் நலனுக்கே” என்ற மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருபவர்.

தனது அனுபவங்களைத் தொகுத்து அவர் 'கருவில் இருந்து கலெக்டர் வரை' என்ற புத்தகத்தை தமிழில் எழுதியுள்ளார்.
அந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை மைலாப்பூர் விவேகானந்தர் கல்லூரியில் நடைபெற்றது.

ஐஏஎஸ் அதிகாரிகள் கிர்லோஸ்குமார், ஆனந்தகுமார், திவ்யா பிரபு, ஐபிஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன், ஐஆர்எஸ் அதிகாரி கனக சுப்பிரமணியன், கல்லூரி முதல்வர் குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

விழா மேடையில் தாய் சின்னத்தாய் மற்றும் தந்தை வரதராஜனை உட்காரவைத்து பெமைப்படுத்திய ராம் மனோகர் பிரசாத்,
ஏற்புரையில் உருக்கமாகக் பேசினார்
Latest Tamil News
“இந்த புத்தகம் எனது ஆறு வருட உழைப்பு. எனது ஒய்வு நேரம் முழுவதையும் இதற்காகவே செலவிட்டுள்ளேன். இதன் மூலம் வரும் வருமானம் அனைத்தும் ஏழை மாணவர்களின் கல்வி நலனுக்கே பயன்படுத்தப்படும்.இதில் நான் பெற்ற வெற்றிகளைவிட சந்தித்த தோல்விகளையும், அவமானங்களையும் மறைக்காமல் அப்படியே எழுதியுள்ளேன்.இதைப் படிக்கும் எந்த மாணவனும் அத்தகைய தோல்வி அல்லது அவமானங்களை சந்தித்தால், அதை எளிதாக சமாளித்து முன்னேற முடியும்.நான் பட்டாம்பூச்சியாகப் பறக்கக் காரணமான என் சமூகத்திற்காக உதவுவதற்கு, என்னையே உருக்கிக் கொள்வதில் தயங்கமாட்டேன்.அதற்கான முதல் படிதான் இந்தப் புத்தகம்.”

இப்படி அவர் பேசி முடித்ததும் அரங்கில் எழுந்த கைதட்டல் நீண்ட நேரம் அடங்கவில்லை.

புத்தகம் தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய வலைத்தளம் www.rpmias.com

- எல். முருகராஜ்

Advertisement