ஆந்திராவில் இன்றும் என்கவுன்டர்: நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை

1


அமராவதி: ஆந்திராவின் அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நக்சலைட்டுகள் 7 பேர் கொல்லப்பட்டனர்.


கடந்த சில மாதங்களாக நாடு முழுதும் உள்ள நக்சல்களை ஒழிக்கும் பணியை பாதுகாப்புப் படையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஆந்திரா - சத்தீஸ்கர் எல்லையில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆந்திராவில் அல்லுரி சீதாராம ராஜு மாவட்டத்தின் மாரேடுமில்லி வனப்பகுதியில் ஆந்திர, சத்தீஸ்கர் மாநில போலீசாருடன் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்

இன்று (நவ 19) காலை வனப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்கள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். பல மணி நேரம் நீடித்த இந்த சண்டையில், நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.



இதே பகுதியில் நேற்று நடந்த என்கவுன்டரில் நக்சலைட்டுகள் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் நக்சல் அமைப்பின் முக்கிய தலைவனும், பாதுகாப்பு படையினர் மீது, 26 முறை கொடூர தாக்குதல் நடத்தியவனுமான மத்வி ஹித்மா, 43, அவனது மனைவி ஆகியோர் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement