இரு குழந்தைகளை கொன்று தந்தை, பாட்டி தற்கொலை; பிரிய மனமில்லாமல் நடந்த சோகம்

திருவனந்தபுரம்: இரு குழந்தைகளை தாயிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதால், குழந்தைகளை பிரிய மனமின்றி விஷம் கொடுத்து கொன்ற தந்தையும், பாட்டியும் தற்கொலை செய்து கொண்டனர்.


கேரள மாநிலம், கண்ணுார் மாவட்டம் பையனுார் கிராமம் ராமந்தளி பகுதியைச் சேர்ந்தவர் கலாதரன் 36; சமையல் தொழிலாளி. மனைவி நயன்தாரா. இவர்களது மகள் ஹிமா, 6, மகன் கண்ணன், 2. கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து வாழ்ந்தனர்.


பையனுார் குடும்பநல நீதிமன்றத்தில் நயன்தாரா தொடர்ந்த வழக்கில் குழந்தைகளை தாயிடம் ஒப்படைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது கலாதரனுக்கு மன வேதனையை ஏற்படுத்தியது.


இந்நிலையில், குழந்தைகளை பிரிய மனமின்றி இருவருக்கும் விஷம் கொடுத்து கொன்று விட்டு தாய் உஷா, 56, உடன் கலாதரன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்த கலாதரனின் தந்தை உன்னிகிருஷ்ணன் வீட்டுக்கு திரும்பிய போது, கதவு அருகே இருந்த கடிதத்தில் தாங்கள் தற்கொலை செய்து கொள்வதாக அவர்கள் குறிப்பிட்டு இருந்தனர்.


இதுகுறித்து பையனுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு உன்னிகிருஷ்ணன் தகவல் கொடுத்தார். போலீசார் சென்ற போது குழந்தைகள் விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தனர். கலாதரனும், தாயும் துாக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தனர்.


அவர்களது உடல்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர். குழந்தைகளை பிரிய மனமின்றி அவர்களை கொன்று தந்தையும், பாட்டியும் தற்கொலை செய்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement