ஆரவல்லி மலை தொடரில் புது சுரங்க குத்தகைக்கு மத்திய அரசு தடை

புதுடில்லி : ஆரவல்லி மலைத்தொடரில் புதிய சுரங்க குத்தகைகளுக்கு மத்திய அரசு முழுமையாக தடை விதித்துள்ளது.

ஆரவல்லி மலை குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி முழுவதும் பரவியுள்ளது. 34 மாவட்டங்களில் ல் 15 மாவட்டங்களின் மொத்தப் பரப்பளவில் 33 சதவீத பகுதியில் பரவியுள்ளது. நான்கு புலிகள் காப்பகங்கள் மற்றும் 22 வனவிலங்கு சரணாலயங்கள் உட்பட பாதுகாக்கப்பட்ட பகுதிகள் உள்ளன. இந்த மலைத்தொடர், மிகப் பெரிய பூகம்பங்கள், அரிப்பு மற்றும் காலநிலை மாற்றங்கள் என அனைத்தையும் தாங்கி நிலைத்தும், உலகின் பழமையான மலைத்தொடர்களில் ஒன்றாகவும் உள்ளது

ஆரவல்லி மலை தொடரின் மொத்த பரப்பளவான 1.44 லட்சம் ச. கிலோ மீட்டரில் 0.19 சதவீத பகுதிகளில் மட்டுமே சுரங்கப் பணிகளுக்கு அனுமதி கொடுத்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்திர யாதவ் கூறியுள்ளார்.

சுற்றியுள்ள நிலப்பரப்பிலிருந்து குறைந்த பட்சம் 100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மலைகளை மட்டுமே 'ஆரவல்லி மலை' என அங்கீகரிக்க முடியும். மேலும், 500 மீட்டருக்குள் அமைந்திருக்கும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மலைகளை மட்டுமே 'ஆரவல்லி மலைத்தொடர்' என அழைக்க முடியும் என மத்திய அரசு அமைத்த குழு சுப்ரீம் கோர்ட்டில் ஒரு விளக்கத்தை சமர்ப்பித்தது. இந்த விளக்கத்தை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக் கொண்டது.


இந்தத் தீர்ப்பு வட இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலப் பயன்பாடு மீது தாக்கத்தை ஏற்படுத்தும் எனசுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும் 'பீப்பிள் ஃபார் ஆரவல்லிஸ்' அமைப்பை சேர்ந்தவரான நீலம் அலுவாலியா கூறுகையில் , "இந்தப் புதிய வரையறை, வடமேற்கு இந்தியாவில் 'பாலைவனமாதலைத் தடுப்பதிலும், நிலத்தடி நீரைப் பெருக்குவதிலும், வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதில் சீர்குலைக்கும் அபாயம் உள்ளது" என்றார்.

இந்நிலையில் மத்திய அரசு தற்போது வெளியிட்டு உள்ள அறிவிப்பில் சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலின்படி புதிய நிலையான சுரங்கத் திட்டங்கள் தயாரிக்கப்படும் வரை, "ஆரவல்லி மலைத்தொடரில் எந்தவொரு புதிய சுரங்கக் குத்தகைகளையும் வழங்குவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது" இவ்வாறு அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

Advertisement