உள்நாட்டு கலவரத்துக்கு அமெரிக்கா,இஸ்ரேல் தான் காரணம்; ஈரான் தலைவர் குற்றச்சாட்டு

4


தெஹ்ரான்: இஸ்ரேல், அமெரிக்க நாடுகள் தான் தங்கள் நாட்டில் போராட்டங்களை தூண்டி விடுவதாக ஈரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி குற்றம்சாட்டியுள்ளார்.


பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மேற்காசிய நாடான ஈரானில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த மாதம் 28ம் தேதி முதல் அங்குள்ள முக்கிய நகரங்களில் வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக, அந்நாட்டு பல்கலை மாணவர்களும் போராட்டத்தில் இணைந்துள்ளனர். போராட்டத்தின் போது, அரசுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

ஈரான் முழுதும் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது. மேலும், பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினால், அமெரிக்கா வேடிக்கை பார்க்காது என்று அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். தங்களின் உள்நாட்டு பிரச்னையில் அமெரிக்கா தலையிடுவதை ஈரான் விரும்பவில்லை. ஈரானின் உள் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என, டிரம்புக்கு ஈரான் அதிபர் மசூத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், டிரம்ப்பின் மிரட்டலை பொருட்படுத்தாத ஈரான் நாட்டு தலைவர் அயத்துல்லா அலி கமேனி, போராட்டக்காரர்களை அடக்கி ஒடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதன்மூலம், போராட்டக்காரர்களுக்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கமேனி நாட்டு மக்களிடம் டிவியில் பேசியதாவது; நாங்கள் போராட்டக்காரர்களிடம் பேச உள்ளோம். அதிகாரிகள் நிச்சயம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். ஆனால், பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்தப் பலனும் இல்லை. போராட்டக்காரர்கள் அடக்கி ஒடுக்கப்பட வேண்டும். இஸ்ரேல், அமெரிக்கா தான் ஈரானில் போராட்டங்களை தூண்டி விடுகின்றன. ஈரானின் ரியால் நாணயத்தின் மதிப்பு குறைந்ததற்கும், நமது எதிரி நாடுகளே காரணம்.

எதிரி நாடுகளுக்கு ஆதரவாக செயல்படும் ஒரு சில நபர்கள் தான், வர்த்தகர்களுக்கு பின்னால் இருந்து கொண்டு, முஸ்லிம் மதத்திற்கும், ஈரானுக்கும் எதிராகவும் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement