ஆன்மிக சக்தி மானுட உலகை காத்து நிற்கும்: துணை ஜனாதிபதி சிபிஆர் பேச்சு

4


வேலுார்: ''ஆன்மிக சக்தியை யாராலும் அழிக்க முடியாது; அது, தான் மானுட உலகை காத்து நிற்கும்,'' என, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


வேலுார், ஸ்ரீபுரம் நாராயணி பீடம் தங்கக்கோவிலில், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தரிசனம் செய்தார். பின், கோவில் வளாகத்தில் நடந்த சக்தி அம்மாவின், 50வது ஜெயந்தி விழாவில், அவர் பேசியதாவது: 'மாதங்களில் நான் மார்கழி' என பகவத்கீதையில் கண்ணன் கூறியது போல, புண்ணியங்கள் நிறைந்த இந்த மாதத்தில், சக்தி அம்மா பிறந்தார். 'இந்த இடத்தில் அம்மன் சுயம்புவாக வரப்போகிறாள்' என, சக்தி அம்மா கூறினார். இறை சக்திக்கு மீறிய சக்தி உலகில் ஒன்றுமில்லை. இந்த ஆன்மிக சக்தியை யாராலும் அழிக்க முடியாது; அது தான் மானுட உலகை காத்து நிற்கும்.


இந்தியாவில், தங்கத்தால் முழுதுமாக அமைக்கப்பட்ட இரு கோவில்கள் உள்ளன. பஞ்சாபில் உள்ள சீக்கியர்களின் வழிபாட்டுத் தலமான பொற்கோவில். நம்முடைய ஸ்ரீபுரம் பொற்கோவில் இவை இரண்டுமேயாகும். இக்கோவில், 100 ஏக்கர் பரப்பளவில், 1,500 கிலோ தங்கத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.


'தர்மத்தை ஒட்டிய வாழ்வே உன்னுடையதாக இருக்க வேண்டும்' என ஆசீர்வதிப்பவர் தான், சக்தி அம்மா. வசதி இல்லாத கோவில்களின் கும்பாபிஷேகத்திற்கு உதவுவது, தண்ணீர் தட்டுப்பாடு உள்ள இடங்களில் குடிநீர் வழங்குவது என, ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தின் தர்ம சேவைகள் நீண்டு கொண்டே போகின்றன.

இலங்கையில், உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தேவையான உதவிப்பொருட்களை, இந்தியாவிலிருந்து நேரில் சென்று வழங்கினார். அன்பு தான் கடவுள் என்பதை ஆணித்தரமாகச் சொல்கிறார், திருமூலர்.


'அன்பில் சிறந்த தவமில்லை' என்கிறார் பாரதி. அப்படி பிறர் மீது அன்பாக இருப்பதும், பிறருடைய மனம் நோகாமல் நடந்து கொள்வதும், சிலர் நம்முடைய மனம் நோகும்படி நடந்து கொண்டாலும்கூட, அதை உடனே மறந்து அவர்களை அரவணைப்பது தான் உயர்ந்த சிந்தனைக்கு அடையாளம். இவ்வாறு சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.


பின், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கோமாதா சிலை மற்றும் தங்க கோவில் வடிவங்களை, சக்தி அம்மா நினைவு பரிசாக வழங்கினார். விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement