போலீசாரை தாக்கிய ரவுடி வழுக்கி விழுந்ததால் 'மாவு கட்டு'

1

சென்னை: போலீசாரை தாக்கி தப்பிய ரவுடிகளில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய முக்கிய ரவுடி நேற்று கைது செய்யப்பட்டார். அவர் வழுக்கி விழுந்ததால் கை, காலில் முறிவு ஏற்பட்டது.

சென்னை, ஓட்டேரி, ஏகாங்கிபுரம், ராஜிவ் காந்தி நகர் பகுதியில், சில தினங்களுக்கு முன் ஓட்டேரி போலீசார் ரோந்துப்பணியில் இருந்தனர்.

அப்போது, மங்களபுரம் குடியிருப்பு பகுதியில், கையில் கத்தியுடன் நின்றிருந்த ரவுடி அப்பு என்பவர், போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்றார்.

அவரிடமிருந்து கத்தியை பறித்து, மடக்கிப்பிடித்த போலீசாரை, கையில் வைத்திருந்த மற்றொரு சிறிய கத்தியால் தாக்க முயற்சித்து, தன் கை, கழுத்து பகுதியிலும் வெட்டிக் கொண்டார்.

அது மட்டுமின்றி, உடன் இருந்த கூட்டாளிகளுடன், போலீசார் இருவர் மீதும் கல்லை வீசி விட்டு, மூன்று ரவுடிகளும் தப்பினர்.

இதுகுறித்து விசாரித்த போலீசார், பெரம்பூர் மற்றும் ஓட்டேரியை சேர்ந்த சூர்யா, 29, விஜயகுமார், 28, ஆகிய இருவரை, நேற்று முன்தினம் கைது செய்தனர். முக்கிய ரவுடியான அப்பு, 36, என்பவர் தலைமறைவாக இருந்தார்.

இந்நிலையில், அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்த போது தப்ப முயன்றதில், அப்புக்கு கை மற்றும் காலில் முறிவு ஏற்பட்டது. அவருக்கு, மருத்துவமனையில் மாவு கட்டு போடப்பட்டுள்ளது.

Advertisement