வரத்து அதிகரித்ததால் குறைந்தது முருங்கைக்காய் விலை

கரூர்: அரவக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிக-ளான கொத்தப்பாளையம், தடா கோவில், வெஞ்சாங்கூடலுார், ஈசநத்தம், அம்மாப்பட்டி, ஊத்துார், பெரிய மஞ்சுவளி, சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில், 50 ஆயிரம் ஏக்கரில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

சீசன் காலங்களில் உள்ளூர் தேவைக்கு போக, நாள்தோறும் லாரிகள் மூலம் வெளி மாநிலங்க-ளுக்கு முருங்கைக்காய் அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த டிசம்பரில், கரூர் மாவட்டத்தில், அதிக-ளவில் பனிப்பொழிவால் முருங்கைகாய் உற்பத்தி குறைந்தது. இதனால், ஒரு கிலோ முருங்கை, 250 முதல், 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது, பனிப்பொழிவு குறைந்து வருவதாலும், வெளி மாவட்டங்களில் இருந்து முருங்கை வர தொடங்கியதாலும், ஒரு கிலோ, 180 முதல், 200 ரூபாய் வரை விலை குறைய தொடங்கியுள்ளது.



இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: நடப்-பாண்டு வழக்கத்துக்கு மாறாக, கரூர்
மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு இருந்தது. இதனால், முருங்கை மரங்களில் உள்ள பூக்கள் எளிதாக விழுந்தன. இதனால் காய் உற்பத்தி எதிர்பார்த்த அளவில் இல்லை. மேலும் காய்கள் முழு வளர்ச்சியடையாமல், சிறிய அளவில் பிசுபிசுத்து காணப்பட்டது.

இதனால், முருங்கைக்காய் விலை அதிகரித்தது. தற்போது, மார்கழி மாதம் நிறைவு பெறும் நிலையில், பனிப்பொழிவு சற்று குறைந்து வருவதாலும், வரத்து அதிகரிப்பாலும், விலை குறைய தொடங்கியுள்ளது. வரும் தை மாதம், திருமணம் சீசன் உள்ளிட்ட, சுப காரியங்கள் தொடங்கும் நேரத்தில், முருங்கைக்கு அதிகளவில் தேவை ஏற்படும். அப்போது, விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement