பைனலில் சவுராஷ்டிரா-விதர்பா * விஜய் ஹசாரே டிராபியில்...

பெங்களூரு: இந்தியாவில் விஜய் ஹசாரே டிராபி உள்ளூர் ஒருநாள் தொடர் நடக்கிறது. 38 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று பெங்களூருவில் நடந்த இரண்டாவது அரையிறுதியில் சவுராஷ்டிரா, பஞ்சாப் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சவுராஷ்டிரா அணி பீல்டிங் செய்தது.
பஞ்சாப் அணிக்கு ஹர்னுார் சிங் (33), கேப்டன் பிரப்சிம்ரன் சிங் (87) ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. அன்மோல்பிரீத் சிங் (100) சதம் எட்டினார். ராமன்தீப் சிங் 42 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் யாரும் ஒற்றை இலக்க ரன்களை தாண்டவில்லை. பஞ்சாப் அணி 50 ஓவரில் 291 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சவுராஷ்டிரா பவுலர் சேட்டன் சகாரியா 4 விக்கெட் வீழ்த்தினார்.
அடுத்து களமிறங்கிய சவுராஷ்டிரா அணிக்கு கேப்டன் ஹர்விக் தேசாய் (64), விஷ்வராஜ் ஜோடி சூப்பர் துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 172 ரன் சேர்த்தது. விஷ்வராஜ் சதம் கடந்தார். இவருக்கு கைகொடுத்த மன்கட், அரைசதம் அடித்தார். சவுராஷ்டிரா அணி 39.3 ஓவரில் 293/1 ரன் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. விஷ்வராஜ் (165 ரன், 127 பந்து), மன்கட் (52) அவுட்டாகாமல் இருந்தனர்.
நாளை பெங்களூருவில் நடக்கும் பைனலில் சவுராஷ்டிரா-விதர்பா அணிகள் மோத உள்ளன.

Advertisement