பார்லிமென்டில் விவாதத்தின் போது ராகுல் எங்கே போனார்; காங்கிரசை விளாசிய மத்திய அமைச்சர் சிவராஜ் சவுகான்

5

புதுடில்லி: 100 நாள் வேலை திட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட மசோதா மீதான விவாதத்தின் போது பார்லிமென்டில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பங்கேற்கவில்லை. அப்போது அவர் எங்கே போனார்? என மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கேள்வி எழுப்பி உள்ளார்.


மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, 100 நாட்கள் வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் அமலானது. கடந்த டிசம்பரில் மத்திய அரசு, இத்திட்டத்தின் கீழான வேலை நாட்களை, 125 ஆக அதிகரித்ததுடன், 'வி.பி.,- ஜி ராம் -ஜி' என்ற, 'விக்சித் பாரத் கியாரன்டி பார் ரோஜ்கர் அண்டு அஜீவிகா மிஷன் - கிராமின்' என்று பெயர் மாற்றமும் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனவரி 10 முதல் பிப்ரவரி 25 வரை போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் தரப்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக டில்லியில் நிருபர்களிடம் சிவராஜ் சவுகான் கூறியதாவது: காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் கீழ் ஊழல் அதிகமாக இருந்தது. 100 நாள் வேலை திட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட மசோதா மீதான விவாதத்தின் போது பார்லிமென்டில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பங்கேற்கவில்லை.


அப்போது அவர் எங்கே போனார்? 'வி.பி.,- ஜி ராம் -ஜி' சட்டம் குறித்து பொய்களைப் பரப்புவதை காங்கிரஸ் நிறுத்த வேண்டும். இந்தத் திட்டத்தை சிறப்பாகச் செய்ததற்காக" பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி சொல்ல வேண்டும்.


அடுத்த ஆண்டு இந்தத் திட்டத்திற்காக, ரூ.1,51,282 கோடி ஒதுக்கப்படும். இதில் ரூ.95,600 கோடி மத்திய அரசால் ஒதுக்கப்படும். இந்தத் தொகை 125 நாட்களுக்குப் போதுமானதாகவும், கிராமங்களின் வளர்ச்சியை உறுதி செய்யும். புதிய திட்டம் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும். பழைய திட்டத்தை விட மிகவும் சிறந்தது. இவ்வாறு சிவராஜ் சவுகான் கூறினார்.

Advertisement