நான் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசவில்லை; காங்கிரஸ் எம்.பி. சசிதரூர்

4

புதுடில்லி: நான் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசவில்லை என்று காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் கூறி உள்ளார்.

கேரளாவின் திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிதரூர். எதையும் வெளிப்படையாக பேசக்கூடிய இவர் அண்மைக்காலமாக பிரதமர் மோடியை பாராட்டி வருகிறார். அவரின் இந்த பாராட்டுகள் காங்கிரசுக்குள்ளே சலசலப்பை ஏற்படுத்தி வருவதோடு, மற்ற முக்கிய தலைவர்கள் மத்தியில் ஒருவித அதிருப்தியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இந் நிலையில் பிரதமர் மோடியை புகழ்ந்து எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை என்று சசிதரூர் கூறி உள்ளார். அவர் மேலும் கூறி இருப்பதாவது;

எனது கருத்துகளின் உண்மையான உள்ளடக்கத்தை, தவறாக புரிந்து கொண்டு சர்ச்சையாக்கப்படுகின்றன. எனது வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்படுகின்றன. எல்.கே. அத்வானிக்கு நான் காட்டியது 98 வயது கொண்ட முதியவரின் பிறந்த நாளில் நான் காட்டிய மரியாதை தான். ராகுலும் அதையே செய்துள்ளார். பெரியவர்களை மதித்து, அவர்களிடம் நமது மரியாதையை காட்டுவது நம் கலாசாரத்தின் ஒரு பகுதி.

அண்மையில் பிரதமர் மோடி இருந்த மேடையில் நான் இருந்தேன். அவரின்(பிரதமர் மோடி) உரையைக் கேட்டேன். பார்த்தேன், அதை பற்றி ஓரிரு வார்த்தைகள் எழுதினேன். அதை தவிர நான் எங்கே அவரை பாராட்டினேன். சமூக ஊடகங்களில் நான் பகிர்ந்த பதிவை படித்தாலே இதை யார் வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம். நான் மோடியை புகழ்ந்து பேசவில்லை.

எனது பதிவை படிக்காமல் செய்திகளின் தலைப்புகளின் அடிப்படையில் விஷயங்களை மதிப்பிடுகிறீர்கள். இது சரியான அணுகுமுறை கிடையாது. குறைந்தபட்சமாவது நான் சொல்வதை அதன் சூழலில் இருந்து பார்க்க முயற்சிக்க வேண்டும். அப்படி செய்தால் இதுபோன்ற சர்ச்சைகளை தவிர்க்கலாம். காங்கிரசில் 17 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். எனவே தவறான புரிதல்கள் தேவையில்லை. காங்கிரஸ் ஒரு ஜனநாயக கட்சி.

கேரள தலைவர்களுடன் எனக்கு நல்லுறவு இருக்கிறது. வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் வெற்றிக்காக நாங்கள் இணைந்து செயல்படுவோம்.

இவ்வாறு சசிதரூர் கூறினார்.

Advertisement