புதிய பள்ளி பாடத்திட்டம் குறித்து கருத்து சொல்லுங்க வாசகர்களே... ஜன.25 வரை வாய்ப்பு

19

சென்னை: புதிய பள்ளி பாடத்திட்டம் குறித்து, கருத்து கூற விரும்புவோர், ஜன. 25ம் தேதி வரை, கருத்து தெரிவிக்கலாம். உலகெங்கும் வாழும் தினமலர் வாசகர்கள் பள்ளிப் பாடத்திட்டத்தை பார்வையிட்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும் என்று தினமலர் வலியுறுத்துகிறது.



தமிழக பள்ளிக்கல்விக்காக, புதிதாக மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், புதிய பாடத்திட்டங்களை உருவாக்க, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தலைமையில், உயர்மட்ட வல்லுனர் குழு மற்றும் கலைத்திட்ட வடிவமைப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டன.



இக்குழுவினரின் வழிகாட்டுதலின்படி, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை, தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சூழ்நிலையியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான பாடத்திட்டங்களை உருவாக்கியது.



இந்த பாடத்திட்டங்கள், இன்று 'https://tnschools.gov.in' இணையதளத்தில் பதிவேற்றப்பட உள்ளன. இது குறித்து, கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள், தங்களின் கருத்துக்களை, அதே இணையதளத்தில் உள்ள படிவத்தின் வாயிலாக, தங்களின் சுய விபரங்களுடன், வரும் 25ம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம்.

தினமலர் வேண்டுகோள்



உலகெங்கும் வாழும் தினமலர் வாசகர்கள், இந்த பாடத்திட்டங்களை பார்வையிட வேண்டும். அது பற்றி தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும் என்று தினமலர் வலியுறுத்துகிறது.



தாங்கள் வசிக்கும் நாட்டில் பள்ளிக் குழந்தைகளுக்கான பாடத்திட்டம் எப்படி இருக்கிறது, தமிழகத்தில் எத்தகைய பள்ளி பாடத்திட்டம் இருக்க வேண்டும் என்பது பற்றி தினமலர் வாசகர்கள் தங்களது மேலான கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும்.
அதன் மூலம் தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தை மேம்படுத்த வாசகர்கள் உதவ வேண்டும் என்று தினமலர் வலியுறுத்துகிறது.



உங்கள் கருத்துக்களை இன்று பதிவு செய்யுங்கள் வாசகர்களே...!

Advertisement