கணேசபுரம் சந்தையில் சுகாதாரக்கேடு

காரைக்குடி: காரைக்குடி கணேசபுரம் சந்தையில் மீன் கழிவுகளால் பன்றிகள் கூட்டமாக சுற்றித் திரிகிறது.

காரைக்குடி கணேசபுரம் சந்தைப்பேட்டையில் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 6.74 ஏக்கர் பரப்பளவில் வாரச்சந்தை அமைந்துள்ளது. இங்கு, ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் 90 கடைகளுடன் கூடிய புதிய சந்தை கட்டப்பட்டது.

ஆனால் 400 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இருப்பதால் கடைகள் வழங்குவதில் சிக்கல் நிலவியது. இதனால் புதிய கட்டடம் பயன்பாடின்றி வீணாகி வருகிறது.தவிர இரவு நேரங்களில் குடிகாரர்களின் கூடாரமாக மாறி வருகிறது. தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பொருட்கள் மற்றும் கரும்பு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வைக்கப்பட்டுள்ள கரும்பு கடைகளுக்கு அதிக கட்டணம் வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது. சந்தையை சுற்றியும் சாக்கடை நிரம்பி கிடப்பதோடு மீன் கழிவும் கொட்டப்படுவதால் நாய்கள், பன்றிகள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகிறது.

வியாபாரிகளுக்கும் சந்தைக்கு வரும் பொதுமக்களுக்கும் சுகாதார கேடு நிலவி வருகிறது.

Advertisement