வங்கதேசத்தில் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்ப தடை

3

நமது நிருபர்




பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடரில் இருந்து வங்கதேச வீரர் முஸ்தபிஜுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டார். இதனால் வங்கதேசத்தில் பிரிமியர் லீக் தொடரை ஒளிபரப்பு செய்ய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.


இந்தியாவில், பிரிமியர் லீக் 'டி-20' தொடரின் 19வது சீசன், மார்ச் 26ல் துவங்க உள்ளது. 10 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் நடந்தது. வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிஜுர் ரஹ்மானை, ரூ. 9.20 கோடிக்கு கோல்கட்டா அணி வாங்கியது. தற்போது வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான மனநிலை காணப்படுகிறது. இதனால், முஸ்தபிஜுரை வாங்கிய கோல்கட்டா அணிக்கு எதிர்ப்பு கிளம்பியது.

'பி.சி.சி.ஐ., அறிவுறுத்தலின்படி முஸ்தபிஜுர் விடுவிக்கப்பட்டார். பிரிமியர் தொடர் வரலாற்றில் முதன் முறையாக, இதுபோன்ற சம்பவம் நடந்தது. வங்கதேச வீரருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது, அந்நாட்டு மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. வங்கதேச இடைக்கால அரசின் விளையாட்டுத்துறைக்கான இடைக்கால ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் கடும் கண்டனத்தை பதிவிட்டார்.


தடை




அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ''எந்த சூழ்நிலையிலும் வங்கதேசமும், கிரிக்கெட் வீரர்களும் அவமானம் அடைவதை ஏற்க மாட்டோம். அடிமைத்தனத்துக்கான காலம் முடிந்துவிட்டது'' என கூறியிருந்தார்.


இந்நிலையில் பொதுமக்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டதைக் காரணம் காட்டி, மார்ச் 26ம் தேதி தொடங்கவிருக்கும் வரவிருக்கும் பிரிமியர் லீக் தொடரை ஒளிபரப்பு செய்ய வங்கதேச இடைக்கால அரசு தடை விதித்துள்ளது.
''அடுத்த உத்தரவு வரும் வரை பிரிமியர் லீக் தொடரின் அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் ஒளிபரப்பு செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என வங்கதேசத்தின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் உதவிச் செயலாளர் முகமது பரோஸ் கான் உத்தரவில் குறிப்பிட்டு இருக்கிறார்.

Advertisement