இறந்த குட்டி யானை உடல் அருகே நான்கு நாட்களாக நிற்கும் தாய்; பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல்

கூடலுார்: முதுமலை அபயாரண்யம் பகுதியில், இறந்த குட்டி யானை உடல் அருகே, நான்கு நாட்களாக நிற்கும் தாய் யானையால், வனத்துறையினர் பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


முதுமலை புலிகள் காப்பகம், அபயாரண்யம் அருகே, 4ம் தேதி குட்டியானை இறந்து கிடப்பதையும், அதன் அருகே, தாய் உட்பட மூன்று யானைகள் முகாமிட்டிருப்பதையும் வன ஊழியர்கள் பார்த்துள்ளனர்.

ஊழியர்கள் அருகே செல்ல முயன்ற போது யானைகள் அவர்களை விரட்டின. இதனால், கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், இறந்த குட்டி யானையின் உடலை புலி ஒன்று அடிக்கடி வந்து உட்கொண்டு செல்கிறது. அதனையும் யானைகள் விரட்டி வருகின்றன.


இந்நிலையில் தாயுடன் இருந்த இரண்டு யானைகள் வேறுப்பகுதிக்கு சென்று விட, தாய் யானை தொடர்ந்து அதே பகுதியில் முகாமிட்டிருந்தது. தாய் யானையின், பாசப்போராட்டம் வன ஊழியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த குட்டி யானை உடல் அருகே, தாய் யானை முகாமிட்டு அருகே செல்ல அனுமதிப்பதில்லை. ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தாய் யானை அங்கிருந்து சென்ற பின், குட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளோம்,' என்றனர்.

Advertisement