வங்கதேச கோரிக்கையை நிராகரித்தது ஐசிசி; புள்ளிகளை இழக்க நேரிடும் என எச்சரிக்கை

டாக்கா: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தங்கள் நாட்டு அணி விளையாடும் போட்டிகளை இந்தியாவுக்கு வெளியே நடத்த வேண்டும் என்ற வங்கதேச அணியின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது.

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 35 நாட்களில் 11 ஹிந்துக்கள், கும்பலால் அடித்துக்கொல்லப்பட்டனர். மத்திய அரசு பலமுறை வலியுறுத்தியும், அங்கு ஆட்சி நடத்தும் முகமது யூனுஸ் தலைமையிலான அரசு அலட்சியம் காட்டி வருகிறது. இதனால், இரு நாடுகளின் உறவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்று, பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் கோல்கட்டா அணிக்காக விளையாட இருந்த வங்கதேச வீரர் முஸ்தபிஜுர் ரஹ்மான் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்த செயலுக்கு வங்கதேசம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது. மேலும், டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இந்தியாவுக்கு வங்கதேச அணி வராது என்றும் தெரிவித்தது. அதுமட்டுமில்லாமல், டி20உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணி விளையாடும் போட்டிகளை இந்தியாவுக்கு வெளியே பொதுவான மைதானத்தில் நடத்துமாறு ஐசிசிக்கு அந்நாட்டு கிரிக்கெட் சங்கம் கடிதம் எழுதியது.

இந்த நிலையில், வங்கதேச கிரிக்கெட் சங்கத்தின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அட்டவணைப்படி, வங்கதேச அணி இந்தியாவில் தான் விளையாட வேண்டும் என்றும், அப்படி இல்லையெனில், புள்ளிகளை இழக்கநேரிடும் என்று எச்சரித்துள்ளது. ஆனால், ஐசிசியிடம் இருந்து இதுபோன்ற எந்த அறிக்கையும் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்று வங்கதேசம் தெரிவித்துள்ளது.

Advertisement