அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி அ.தி.மு.க., மனு

2

சென்னை: தி.மு.க.,வைச் சேர்ந்த அமைச்சர் நேருவுக்கு எதிராக, அமலாக்கத்துறை எழுதிய கடிதம் அடிப் படையில், வழக்குப்பதிவு செய்ய, லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிடக் கோரி, அ.தி.மு.க., - எம்.பி., இன்பதுரை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், கடந்த 2024 - -25ம் ஆண்டுகளில், உதவி, இளநிலைப் பொறியாளர், சுகாதார ஆய்வாளர் உட்பட, 2,538 பணியிடங்களுக்கு, நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

ஒரு பதவிக்கு 25 லட்சம் முதல் 35 லட்சம் ரூபாய் வரை என, மொத்தம் 634 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டுள்ளதாக கூறி, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யும்படி, தமிழக டி.ஜி.பி.,க்கு, அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியது.

அந்த ஆதாரங்களின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்யும்படி, அ.தி.மு.க., - எம்.பி. இன்பதுரை, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேருவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்பதுரை மனு தாக்கல் செய்துள்ளார்.

மனுவில், 'ஊழல் எப்படி நிகழ்ந்தது என்பது தொடர்பாக, அமலாக்கத்துறை ஆவணங்களுடன் கூறியுள்ளது. அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யும்படி புகார் அளித்தும், லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை.

'எனவே, அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவு செய்து, நியாயமான முறையில் குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement