பரவசத்தில் மூழ்கடித்த 'சிவ நவ பக்தி'

பா ர்வையாளர்களை பரவசத்தில் மூழ்கடித்தது, வாணி மஹாலில் நடந்த ஸ்ரீதேவி நிருத்யாலயாவின் 'சிவ நவ பக்தி' நாட்டிய நாடகம். 55 மாணவர்களை கொண்டு, ஒன்பது விதமான பக்தி தலைப்புகளை, ஒன்பது விதமான கதைகள் கொண்டு, யாவருக்கும் புரியும் வகையில் ஆடல் அடவு முறைகளையும், கதையின் கருத்துகளையும் தெள்ளத் தெளிவாக விளக்கினார்.

சோபனா கொராம்பில் கதை அமைப்புடன், டாக்டர் எஸ்.ரகுராமனின் பாடல் வரிகளில், எம்பார் கண்ணன் இசை அமைப்பில், சீலா உன்னிகிருஷ்ணனின் ஆடல் அமைப்பில், முருகன் குழுவினரின் ஒளி அமைப்பில், மிக அற்புதமாய் காட்சியமைக்கப்பட்டிருந்தது.

கதை முழுதும் இணைந்திருந்த சிவன் - பார்வதியானாலும் சரி, ஒரு சிறிய நொடி வரும் மான்குட்டி அல்லது முதலாளியின் கையாளானாலும் சரி, அனைவருக்கும் முக்கியத்துவமான ஆடை, ஆபரண, ஒப்பனைகள், காட்சிக்கு தகுந்த அளவோடு இருந்தது, அனைவரின் பாராட்டையும் பெற்றது.

வசனம், பாடல்கள், இசை, மந்திரங்கள் என, நாட்டியத்திற்கு குறைவும் இல்லாமல், கதாபாத்திரங்களின் தன்மையை நன்கு மெருகேற்றி இருந்தனர்.

சிவனின் பக்தியை மூலமாக கொண்டு, சிவபேறு பெற்ற அடியார்களின் கதைகளின் குறும்படமே சிவ நவ பக்தியாகும். நவ என்றால் ஒன்பது. அந்தவகையில், ஒன்பது வகையான பக்தி அணுகுமுறையில், சிவனின் அருள் பெற்றதை, இந்த நாடகம் விளக்குகிறது.

நவ வித பக்திகள் கதைகளுடன் முறையே, ஸ்ரவனம் - காரைக்கால் அம்மையார் கதை, கீர்த்தனம் - மாணிக்கவாசகரின் கதை, ஸ்மரனம் - மார்க்கண்டேயன் கதை, பாத சேவனம் - பார்வதியின் காஞ்சி புராண கதை, அர்ச்சனம் - சிவ பூஜை செய்த குகன் கதை, வந்தனம் - நந்தனார் சரித்திரம், தாஸ்யம் - சிவ வாகனமான நந்தியின் சேவை, சக்யம் - சுந்தரர் கதை, ஆன்ம நிவேதனம் - கண் எடுத்து அப்பிய கண்ணப்பர் கதை என, வரிசையான மாலையாய் தொகுத்து வழங்கி, அனைவருக்கும் பக்தியின் தனித்துவத்தை உணர்த்தச் செய்தனர்.

- மா.அன்புக்கரசி

Advertisement