விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகளில் குறுக்கிடும் மம்தா அரசு; அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

9

கோல்கட்டா: அதிகாரிகள் ஒவ்வொரு முறையும் சோதனையிடும் போதெல்லாம், முதல்வர் மம்தா பானர்ஜி அந்த இடத்திற்குச் சென்று இடையூறு ஏற்படுத்துவதாக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை புகார் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில், திரிணமுல் காங்கிரஸ் ஐ.டி., பிரிவு தலைவரும், தேர்தல் வியூகம் வகுக்கும், 'ஐ - பேக்' நிறுவனத்தின் இயக்குநருமான பிரதீக் ஜெயின் வீடு மற்றும் அலுவலகத்தில், அமலாக்கத் துறை கடந்த ஜனவரி 8ம் தேதி சோதனை நடத்தியது. அப்போது, அதிரடியாக நுழைந்த முதல்வர் மம்தா பானர்ஜி, அங்கு கைப்பற்றி வைக்கப்பட்டு இருந்த முக்கிய ஆவணங்கள், லேப்டாப்கள், கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்குகளை அத்துமீறி பறித்துச் சென்றார்.

அது மட்டுமின்றி, மேற்கு வங்க அரசு சார்பில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்கும் பதியப்பட்டது. அதிர்ச்சியடைந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், சோதனை நடத்த விடாமல் மம்தா குறுக்கீடு செய்ததாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, விபுல் பாஞ்சோலி ஆகியோர் முன்னிலையில் அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார். அப்போது, அவர் கூறியதாவது;

இது மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடிய ஒரு முன்மாதிரியான செயல். அதிகாரிகள் எப்போது எல்லாம் சோதனை செய்கிறார்களோ, அப்போதெல்லாம் முதல்வர் மம்தா பானர்ஜி அந்த இடத்திற்குச் சென்று இடையூறு ஏற்படுத்துகிறார். ஐபேக் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது, மம்தாவுடன் போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோரும் உடன் சென்றுள்ளனர். அவர்களும் இந்தச் செயலுக்கு உடந்தையாக இருந்தனர். பாதுகாப்பு வழங்க வேண்டிய உயர் போலீஸ் அதிகாரிகளே முதல்வருடன் சேர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

முன்பும், ஒருமுறை சிபிஐ இணை இயக்குநரின் வீடு முற்றுகையிடப்பட்டதுடன், அவர் மீது கற்களும் வீசப்பட்டன. மாநில அரசு தொடர்ந்து மத்திய புலனாய்வு அமைப்புகளின் பணிகளில் குறுக்கிடுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் செய்வதைத் தடுக்கின்றன. மத்தியப் படைகளின் மன உறுதியைக் குலைக்கும் வகையில் அமைந்துள்ளது, என்று குறிப்பிட்டார்.
மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான அபிஷேக் மனு சிங்வி, அமலாக்கத்துறை மீதான நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்கக்கூடாது என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அமலாக்கத்துறை மீது மேற்கு வங்க அரசு பதிந்த வழக்குக்கு தடை விதித்தனர். நடந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், 'இப்போது நாங்கள் தலையிடவில்லை என்றால், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும். அதனால் தலையிடுகிறோம்' என்று தெரிவித்தனர்.

Advertisement