குறுந்தொழிலுக்கு தொழிற்பேட்டை விரைவாக அமைக்க எதிர்பார்ப்பு

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கத்தில், குறுந்தொழில் நிறுவனங்கள் பயன்பெற, புதிய தொழிற்பேட்டை அமைக்கும் பணிகளை, அரசு விரைவாக துவக்குமா என்ற எதிர்பார்ப்பு, தொழில்முனைவோரிடம் எழுந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தொழில் துவங்க, பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தொழிற்பேட்டையை, 'சிட்கோ' எனப்படும் தமிழக சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் அமைக்கிறது.

இந்நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கத்தில் ஏற்கனவே உள்ள தொழிற்பேட்டை அருகில், குறுந்தொழில் நிறுவனங்களுக்காக புதிய தொழிற்பேட்டையை அமைக்க உள்ளது. இந்த பணிகளை விரைவாக துவக்க, 'சிட்கோ'வுக்கு தொழில்முனைவோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, சிறு, குறு, நடுத்தர தொழில்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

திருமுடிவாக்கத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள புதிய தொழிற்பேட்டை, சென்னை வெளிவட்ட சாலை அருகில் வருகிறது. அதற்காக, சென்னை பெருநகர வளர்ச்சி குழும நிலமும் தேவை. நிலத்தை பெறுவதற்கான பணிகள் நடக்கின்றன.

நிலம் கிடைத்ததும், சிட்கோ வசம் உள்ள நிலத்தையும் சேர்த்து, எவ்வளவு ஏக்கரில் தொழிற்பேட்டை அமைப்பது என்பது இறுதி செய்யப்படும்.

பின், தொழிற்பேட்டை அமைக்கும் பணிகள் விரைவாக துவங்கும். அங்குள்ள மனைகள், 200 சதுர அடி, 500 சதுர அடி என, குறுந்தொழில் துவக்க ஒதுக்கப்படும்.

இவ்வாறு அவர்கூறினார்.

Advertisement