மழை கொட்டியும் வறண்டுள்ள கோவில் குளங்கள் ஏன் இந்த அவலம்?: நெடுஞ்சாலைத்துறை மீது பழி போடும் மாநகராட்சி
காஞ்சிபுரம்: வடகிழக்கு பருவமழை போதிய அளவில் பெய்தாலும், காஞ்சிபுரத்தில் கோவில் குளங்கள், பொது குளங்கள் எல்லாம் வறண்டு கிடக்கின்றன. மழைநீர் வடிகால்வாய் கட்டமைப்புகளை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததே காரணம் என, பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மாநகராட்சியோ நெடுஞ்சாலைத்துறை மீது பழி போட்டு ஒதுங்க பார்க்கிறது.
நடப்பாண்டில் வடகிழக்கு பருவ மழை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொட்டித் தீர்த்தது. தொடர் மழையால், நகரங்கள் எல்லாம் சில நாட்கள் தண்ணீரில் திணறின. இந்த பருவ மழை காலத்தில், 30 செ.மீ., மழை பெய்துள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஊரரெல்லாம் வெள்ளம் தேங்கிய நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள கோவில் குளங்கள், பொது குளங்களுக்கு மட்டும் ஏனோ தண்ணீர் செல்லவில்லை.
பெரும்பாலான குளங்கள் குறிப்பாக, கோவில் குளங்கள் சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் வறண்டுள்ளன. காஞ்சி மாநகராட்சி எல்லையில் கோவில் குளங்கள், குட்டைகள், ஏரிகள் என, 79 நீர் ஆதாரங்கள் உள்ளன. இந்த நீர்நிலைகளுக்கு மழைநீர் செல்லும் கால்வாய்களை முறையாக மாநகராட்சி நிர்வாகம் பராமரிக்காததே இதற்கு காரணம் என, நகர மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சீரமைக்கவில்லை
காஞ்சிபுரம் நகர மக்கள் கூறியதாவது: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பராமரிப்பில் உள்ள மங்கள தீர்த்த குளம், 2018ம் ஆண்டில், 'பிரசாத்' திட்டத்தின் கீழ், 11.85 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டது. ஆனால், குளத்திற்கு மழைநீர் வரும் கால்வாய்களை துார்வாரி சீரமைக்கவில்லை. ரங்கசாமி குளத்தில், அருகில் உள்ள குடியிருப்புகளில் இருந்து கழிவுநீர் திறந்துவிடப்படுகிறது.
மழைக்காலத்தில் கழிவுநீர் கலப்பது பற்றி, மாநகராட்சியிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.விளக்கடி கோவில் தெரு, மேட்டுத்தெரு, ஏகாம்பரநாதர் கோவில் சுற்றிய பகுதி என பல இடங்களில் மழைநீர் செல்ல சரியான கட்டமைப்புகள் உள்ளன. ஆனால், அவற்றை மாநகராட்சி கண்டுகொள்வதில்லை.
காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவில் குளம், உலகளந்த பெருமாள் கோவில் குளம், வைகுண்ட பெருமாள் கோவில் குளம் உள்ளிட்ட குளங்கள் லட்சக்கணக்கான ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டும், முறையான வடிகால்வாய் இல்லாததால், இக்குளங்கள் வறண்டு கிடக்கின்றன. மாநகராட்சி எந்த அளவில் மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ளது என்பதற்கு இதுவே சாட்சி.
காஞ்சிபுரம் நகரின் நிலத்தடிநீர் ஆதாரமாக விளங்கும் குளங்களை துார்வாரி, குளத்திற்கு மழைநீர் வரும் கால்வாய்களை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
வழித்தடம்
காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி கூறியதாவது: காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் குளத்திற்கு மழைநீர் செல்லும் பழைய கால்வாய், மண்ணில் புதைந்து இருந்தது. அதை கண்டறிந்து, மழைநீர் செல்லும் வகையில் வழித்தடம் அமைத்துள்ளோம்.
@quote@நகரில் உள்ள பிற குளங்களுக்கு, மழைநீர் செல்லும் பெரும்பாலான கால்வாய்கள் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இக்கால்வாயை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுப்பதில்லை.quote
மாநகராட்சி சார்பில் சீரமைக்க அனுமதியும் கொடுப்பதில்லை. இதுவே, கோவில் குளங்கள் வறண்டுள்ளதற்கு காரணம். இதற்கு தீர்வு காண, நெடுஞ்சாலைத்துறையினருடன் பேச உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
காச வாங்கிட்டு ஓட்டுபோடுறவன் இதையெல்லாம் கண்டுகொள்ள மாட்டான். காசு வாங்காதவன் ஒட்டு போட போக மாட்டான்
இது வழக்கமான ஒன்றுதான் மாநகராட்சி என்றுமே தனது தவறை ஒத்துக் கொள்ளாது