நால்ரோடு விரிவாக்கம் தேவை : குறிச்சிக்கோட்டையில் சிரமம்

உடுமலை: குறிச்சிக்கோட்டை நால்ரோடு சந்திப்பில், நீண்ட காலமாக நீடிக்கும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காண ரோட்டை சீரமைத்து, விரிவாக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

உடுமலை - சின்னாறு ரோடு, தளி - குமரலிங்கம் ரோடு சந்திக்கும் சந்திப்பு பகுதி குறிச்சிக்கோட்டையில் உள்ளது. இந்த நால்ரோட்டில், நாள்தோறும் நுாற்றுக்கணக்கான பயணியர் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர்.

இதே போல், இரு வழித்தடத்திலும், 20க்கும் அதிகமான பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் நால்ரோடு சந்திப்பில், நிற்க போதிய இடவசதியில்லை.

குறுகலான இடத்தில், பஸ்சை நிறுத்தும் போது, இரு ரோடுகளிலும் பிற வாகனங்கள் செல்ல முடியாமல், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

தளி ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் திரும்பும் போது, சின்னாறு ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து ஏற்படுகிறது.

இப்பிரச்னைக்கு தீர்வாக சந்திப்பு பகுதியில், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, விரிவாக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement