'தரமான விதைகள் வாயிலாக அதிக மகசூல் பெறலாம்'

திருப்பூர்: விவசாயிகள் தரமான விதைகளை வாங்கிப் பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும் என, விதை ஆய்வு துறை தெரிவித்துள்ளது.

விதை ஆய்வு துறை துணை இயக்குநர் சுமதி கூறியதாவது:

தைப்பருவத்தில் சிறிய மற்றும் பெரிய வெங்காயம் சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனர். விவசாய நிலங்களில், விளைச்சல் அதிகரித்து அதிக வருமானம் தருவதில் விதைகள் பங்கு மிகவும் முக்கியம்.

தரமான விதைகளை சரியான விலையில் விவசாயிகள் பெறும் வகையில், 'விதை சான்று மற்றும் அங்ககச் சான்று துறை' நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

விவசாயிகளின் விதை விற்பனை நிலையங்களில் விதைகளை வாங்கும் போது விதைகள் தரத்தை உறுதிப்படுத்தி வாங்க வேண்டும். உரிமம் பெறாத விதை விற்பனை நிலையங்களில் வாங்கக்கூடாது; காலாவதியான விதைகளை வாங்க கூடாது.

விதைகளை வாங்கும் போது விற்பனை ரசீது கட்டாயம் பெற வேண்டும். ரசீதில் விதைகளின் ரகம், நிலை, குவியல் எண், காலாவதி தேதி ஆகியன இருக்க வேண்டும்.

காய்கறி நாற்று விதைகளை உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே வாங்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் காய்கறி நாற்றுக்கள் மற்றும் பழச்செடி விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. வெங்காயம், தக்காளி மற்றும் கத்தரி போன்றவை விற்பனையாகிறது.

நாற்றுக்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நாற்றுப்பண்ணை உரிமையாளர்கள் உரிமம் பெற்று விற்பனை செய்ய வேண்டும். தரமற்ற நாற்றுக்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

விற்பனையாளர்கள் இருப்பு மற்றும் விலைப்பட்டியலை தகவல் பலகையில் குறிப்பிட வேண்டும். உரிய விவரங்களுடன் ரசீது வழங்க வேண்டும். அதிகபட்ச சில்லறை விலைக்கு மிகாமல் விற்பனை செய்ய வேண்டும்.

நாற்றுப்பண்ணை உரிமையாளர்கள் காய்கறி மற்றும் பழவகை நாற்றுகள் உற்பத்தி செய்ய பதிவு சான்று பெற்ற ரகங்களை மட்டும் பயன்படுத்தி நாற்றுகள் உற்பத்தி செய்து தரமான நாற்றுக்களை விற்க வேண்டும்.

காய்கறி நாற்றுக்கள் உற்பத்தி செய்ய தேவையான விதை கொள்முதல் பட்டியல், குவியல் எண், காலாவதி நாள் மற்றும் நாற்றாங்கால் விதைப்பு நாள் ஆகிய விவரங்கள் பராமரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement