மலேசிய ஓபன் பாட்மின்டன்; அரையிறுதியில் பி.வி. சிந்து ஏமாற்றம்

கோலாலம்பூர்: மலேசிய ஓபன் பாட்மின்டன் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தார்.

கோலாலம்பூரில் நடந்து வரும் மலேசிய ஓபன் பாட்மின்டன் தொடரின் காலிறுதிப் போட்டியில் நடப்பு உலக சாம்பியனான ஜப்பானின் யமாகுச்சியை எதிர்கொண்டு விளையாடினார். முதல் செட்டை சிந்து கைப்பற்றிய நிலையில், திடீரென காயம் காரணமாக போட்டியின் பாதியிலேயே விலகுவதாக யமாகுச்சி அறிவித்தார். இதனால், சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

இந்த நிலையில், இன்று நடந்த அரையிறுதியில் சீனாவைச் சேர்ந்தவரும், உலகத்தரவரிசையில் 2வது இடம் பிடித்த வீராங்கனையுமான வாங் ஸி யியை எதிர்த்து விளையாடினார். பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் சீனா வீராங்கனையிடம் 16-21, 15-1 என்ற நேர் செட் கணக்கில் சிந்து போராடி தோல்வியை தழுவினார்.

காயம் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் முதல் எந்தவித போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வந்த சிந்து, மலேசிய ஓபன் பாட்மின்டனில் களம் கண்டார். முதலில் விளையாடிய 4 போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்த சிந்து, அரையிறுதியில் தோல்வியடைந்து, பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.

Advertisement