தி.மு.க., கூட்டணியில் காங்., இருக்காது: பொங்கல் விழாவில் பழனிசாமி உறுதி

9

மேட்டூர்: ''தி.மு.க., ஆட்சியில் மக்களுக்காக துரும்பை கூட கிள்ளி போடவில்லை,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி சாடினார்.


சேலம் மாவட்டம், மேச்சேரி, காரப்பட்டி பள்ளத்தில், அ.தி.மு.க., சார்பில் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. காலை 10:30 மணிக்கு, பழனிசாமி மாட்டு வண்டியில், நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வந்தார். பின், தயாராக வைக்கப்பட்டிருந்த பானைகளில், அரிசியை போட்டு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.


பின் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு காளை, பெண்கள், சிறுமியரின் வள்ளி கும்மி, கிராமிய நடனம், குதிரை நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை பார்வையிட்டு, நடன கலைஞர்களை பாராட்டி பரிசு வழங்கினார்.


தொடர்ந்து பழனிசாமி பேசியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் விவசாயிகளுக்கு ஏராளமான சலுகைகள் கிடைத்தன. கூட்டுறவு வங்கிகளில், இருமுறை விவசாய கடன் ரத்து செய்யப்பட்டது. மேட்டூர் அணை உபரிநீர் திட்டத்தை துவங்கினோம். அடுத்து வந்த, தி.மு.க., அரசு, அத்திட்டத்தை முடிக்கவில்லை. இதனால், விவசாயிகள் கஷ்டப்படுகின்றனர்.


மீண்டும், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மேட்டூர் அணை உபரிநீர் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும். தி.மு.க., ஆட்சியில் மக்களுக்காக ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.


பின், பழனிசாமி அளித்த பேட்டி:
அ.தி.மு.க., கூட்டணியில் வேறு சில கட்சிகளும் விரைவில் இணையும். யார் யாரெல்லாம் சேர்வர் என்பதை பகிரங்கமாக கூற முடியாது. 1965ல் நடந்த சம்பவம், 'பராசக்தி' படம். அப்போது, தி.மு.க.,- அ.தி.மு.க., கட்சிகள் கிடையாது. தமிழ் மொழிக்காக, நம் முன்னோர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். அதனால், அது குறித்து இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது.


மத்திய அரசு கொண்டு வந்த ஓய்வூதிய திட்டத்தில் சில மாற்றங்களை செய்து, தி.மு.க., அரசு தன்னுடைய திட்டம் போல அறிவித்துள்ளது; சில அரசு ஊழியர் சங்கங்கள் அதற்கு பாராட்டு தெரிவித்துள்ளன. ஆனால், பெரும்பாலான சங்கங்கள் எதிர்க்கின்றன. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், பழைய ஓய்வூதிய திட்டம் கால சூழலைப் பொறுத்து நடைமுறைப்படுத்தப்படும்.


வரும் தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், காங்., இருக்காது. தி.மு.க., தேர்தல் நேரத்தில், பல்வேறு வாக்குறுதிகளை கொடுக்கும். ஆட்சிக்கு வந்த பின், அதை நிறைவேற்றாமல் ஏமாற்றும். தற்போது அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், துாய்மை பணியாளர்கள் என, ஒவ்வொரு துறை ஊழியர் சங்கங்களும் கோரிக்கைகளை வலியுறுத்தி தினம் ஒரு போராட்டம் நடத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement