தனது பிரச்னைக்கே குரல் கொடுக்காத விஜய் மக்களுக்காக எங்கே குரல் கொடுப்பார் மா.கம்யூ., மாநில செயலாளர் சண்முகம் கேள்வி

3

விழுப்புரம்: 'தன்னை நம்பி அதிக முதலீடு செய்துள்ள தயாரிப்பாளருக்காக குரல் கொடுக்காமல் மவுனமாக இருக்கும் விஜய், மக்களுக்காக எங்கே குரல் கொடுப்பார்' என மா.கம்யூ., மாநில செயலாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மா.கம்யூ., மாவட்ட குழு சார்பில் நிதியளிப்பு மற்றும் சிறப்பு பேரவை கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. மாநில செயலாளர் சண்முகம் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் நிதி பெற்று கொண்டார்.

தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

அமெரிக்கா அதிபர் டிரம்பின் 500 சதவீத வரிவிதிப்பால் தமிழகத்தில் ஜவுளி துறை, தோல் உற்பத்தி பாதித்துள்ளது. இந்த வரி விதிப்பை கண்டித்து தமிழகத்தில் வரும் 22ம் தேதி முக்கிய தொழில் கேந்திரங்கள் உள்ள பகுதிகளான சென்னை, சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் உட்பட 10 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

பா.ஜ., தங்கள் எதிரிகளை பழிவாங்க அமலாக்கம், வருமான வரி, மத்திய புலனாய்வு துறைகளை பயன்படுத்தி அவர்களை மிரட்டி பணிய வைக்கும் தந்திரத்தை கடைபிடிக்கிறது. தேர்தல் ஆணையத்தையும் தவறான முறையில் பயன்படுத்தி பல மாநிலங்களில் ஜனநாயகம் பெயரில் மோசடி செய்து ஆட்சியை கைப்பற்றி வருகின்றனர்.

தற்போது திரைப்பட தணிக்கை வாரியத்தையும் தங்கள் செயல்பாட்டிற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்த துவங்கி விட்டனர். இதனால் தான், ஜனநாயகன் படத்திற்கு சான்றிதழ் வழங்கவில்லை. பராசக்தி படத்திற்கு நீண்ட இழுத்தடிக்கு பின், 10 முதல் 15 வசனங்களை நீக்கிவிட்டு சான்றிதழ் தந்துள்ளனர்.

ஜனநாயகன் படத்திற்கு சான்றிதழ் வழங்காதது கண்டிக்கத்தக்கது. பா.ஜ., தனது அரசியல் சுய லாபத்திற்காக செயல்படுகிறது.

ஒரு கட்சியின் தலைவராக உள்ள நடிகர் விஜய், இந்த விஷயத்தில் வாயை திறக்காமல் உள்ளார். மக்களுக்கு பிரச்னை என்றால் விஜய் நிற்பான் என்று பஞ்ச் வசனம் பேசும் அவர், ஏன் தன்னை நம்பி அதிக முதலீடு செய்துள்ள தயாரிப்பாளருக்காக குரல் கொடுக்காமல் மவுனமாக இருக்கிறார்.

தனது பிரச்னைக்கே குரல் கொடுக்காமல் மவுனம் காக்கும் விஜய், மக்களுக்காக எங்கே குரல் கொடுக்க போகிறார்.

நிலக்கரி ஊழல் தொடர்பாக அமித்ஷா, பண பரிவர்த்தனை செய்ததாக உண்மையிலே ஆதாரம் இருந்தால் மம்தா பானர்ஜி, அதை வெளியிட வேண்டும்.

தி.மு.க., கூட்டணியில் மா.கம்யூ., நிச்சயமாக இரட்டை இலக்கங்களில் தொகுதியை கேட்போம்.

இவ்வாறு சண்முகம் கூறினார்.

Advertisement