தார்ப்பாய் மூடாத லாரிகளால் ஆபத்து

திருத்தணி: தேசிய நெடுஞ்சாலையில் சவுடு மண் மற்றும் கற்கள் ஏற்றிச் செல்லும் டிப்பர் லாரிகள் தார்ப்பாய் மூடாமல் செல்வதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

சென்னை- - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூர் - திருத்தணி பொன்பாடி சோதனைச்சாவடி வரை உள்ள இரு வழிச்சாலையை, நான்கு வழியாக விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது.

நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடைபெறும் இடங்களில் உள்ள பாறை கற்களை உடைத்து, டிப்பர் லாரிகளில் கொண்டு செல்லப்படுகின்றன. அப்போது, தார்ப்பாய் மூடாமல் லாரிகள் செல்வதால், சிறிய பாறை கற்கள் லாரியில் இருந்து நெடுஞ்சாலையில் விழுகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

மேலும், சவுடு மண் கொண்டு செல்லும் லாரிகள் தார்ப்பாய் மூடாமல் அசுர வேகத்தில் செல்வதால், அதிலிருந்து துாசு மற்றும் மண் நெடுஞ்சாலையில் விழுகின்றன. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி தவறி விழுந்து படுகாயம் அடைகின்றனர். எனவே, தார்ப்பாய் மூடாமல் செல்லும் டிப்பர் லாரி ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement