திறந்தநிலை கழிவுநீர் தொட்டி பள்ளி அருகே விபத்து அபாயம்

ஆர்.கே.பேட்டை: அரசு தொடக்க பள்ளி எதிரே உள்ள சுகாதார வளாகத்தின் கழிவுநீர் தொட்டி திறந்த நிலையில் உள்ளதால், மாணவ - மாணவியர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

ஆர்.கே.பேட்டை ஒன்றியம் தாமனேரி கிராமத்தில் உள்ள ஊராட்சி அலுவலக வளாகத்தில், அரசு தொடக்க பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. அரசு தொடக்க பள்ளிக்கு எதிரே, ஊராட்சிக்கு உட்பட்ட சுகாதார வளாகம் உள்ளது.

சமீபத்தில், இந்த சுகாதார வளாகம் புதுப்பிக்கப்பட்டது. சுகாதார வளாகத்தின் பின்புறம் உள்ள கழிவுநீர் தொட்டி, பராமரிப்பின்றி திறந்த நிலையில் உள்ளது. இந்த தொட்டியில் பாதி அளவிற்கு கழிவுநீர் நிரம்பியுள்ளது.

திறந்தநிலையில் உள்ள கழிவுநீர் தொட்டியை ஒட்டி, நாகாலம்மன் கோவிலுக்கு செல்லும் கான்கிரீட் சாலை அமைந்துள்ளது.

திறந்தநிலையில் உள்ள கழிவுநீர் தொட்டியால், இந்த வழியாக கோவிலுக்கு செல்வோரும், அருகே உள்ள பள்ளி மாணவ - மாணவியரும் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.

எனவே, பள்ளி மாணவ - மாணவியரின் நலன் கருதி, கழிவுநீர் தொட்டியை முறையாக மூடி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement