தேசிய திறனாய்வு தேர்வு 5,892 பேர் பங்கேற்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த தேசிய திறனாய்வு தேர்வில் 5,892 மாணவ, மாணவிகள் தேர்வெழுதினர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தேசிய திறனாய்வு தேர்வு (என்.எம்.எம்.எஸ்) நடத்தப்படுகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகள் அடுத்த 4 கல்வியாண்டுகள் (9 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பட்சத்தில், மாதந்தோறும் 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

அதன்படி, 48 மாதங்களுக்கு ரூ. 48 ஆயிரம் ஊக்கத்தொகை மாணவர்களின் வங்கி அல்லது அஞ்சலக கணக்கில் வரவு வைக்கப்படும். இத்தேர்வு பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தினமும் தனி வகுப்புகளும் நடத்தப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான தேசிய திறனாய்வு தேர்வு, சி.இ.ஓ., கார்த்திகா மேற்பார்வையில் 20 மையங்களில் நேற்று நடந்தது. தேர்வெழுத 2,343 மாணவர்கள், 3,689 மாணவிகள் என மொத்தமாக 6,032 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இதில், 2,276 மாணவர்கள், 3,616 மாணவிகள் என மொத்தமாக 5,892 பேர் தேர்வெழுதினர். 140 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. காலை 9.30 மணி முதல் பகல் 11:00 மணி வரையிலும், 11:30 முதல் பகல் 1:00 மணி வரை தேர்வு நடந்தது. விடைத்தாள்கள் கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Advertisement