குளத்தின் கரையில் ஆக்கிரமிப்பு; ஆளுங்கட்சி பிரமுகர் 'சேட்டை; ' பொதுப்பணித்துறையினர் 'குறட்டை'

அவிநாசி: அவிநாசி, காந்திபுரம், ஏரிமேடு பகுதியில், 240 ஏக்கர் பரப்பளவு உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சங்கமாங்குளம் உள்ளது.

அவ்வப்போது பெய்யும் மழை மற்றும் அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்திலும் தண்ணீர் வருவதால், தற்போது குளம், 65 சதவீதம் நிரம்பியுள்ளது. இதனால், சுற்று வட்டாரத்திலுள்ள விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

குளத்தின் கரையை ஒட்டியே, சிறிய அளவில் கருப்பராயன் கோவில் இருந்தது. தற்போது அந்தக் கோவிலுக்கு அருகில், காலி இடத்தை ஆக்கிரமிப்பு செய்து, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் கம்பி வேலி போட்டுள்ளனர். இவ்வாறு, கோவில் பெயரை சொல்லி ஆளுங்கட்சி பிரமுகர்கள், இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

அப்பகுதியினர் கூறியதாவது:

கருப்பராயன் கோவில் கடந்த, 60 ஆண்டுகளுக்கு மேலாக பத்துக்கு பத்து என்ற அளவில் இருந்தது. தற்போது, ஒரு சிலர் கோவிலை பெரிதாக்குகிறோம் என்று சொல்லி, இடத்தை ஆக்கிரமித்துள்ளனர். அதேபோல அதன் அருகிலேயே பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தை கம்பி வேலி போட்டு ஆக்கிரமித்துள்ளனர்.

இது குறித்து, அவிநாசி பகுதியை சேர்ந்த பொதுப்பணித்துறை அலுவலர் ஒருவரிடம் புகார் சொன்ன போது, ஆக்கிரமிப்பு செய்தவரிடமே எங்களைப்பற்றி சொல்லி உள்ளார்.

சங்கமாங்குளத்தில் தற்போதுள்ள தண்ணீரின் அளவை விட, மழை காலங்களில் நீர் வரத்து அதிகரிக்கும்போது, கரையை ஒட்டி கட்டடம் எழுப்புவதால் குளக்கரையின் உறுதித் தன்மை பலவீனமடையும்.

எனவே, அளவீடு செய்து, குளத்தின் அருகில் எங்கெல்லாம் ஆக்கிரமிப்பு உள்ளதோ அனைத்தையும் மீட்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement