'தேடல்' உள்ள மாணவர்களே முதன்மையானவராக திகழ்வர்!

அவிநாசி: ரோட்டரி திருப்பூர் மாவட்டம் 3203, ரோட்டரி திருப்பூர் செலிப்ரேஷன், ரோட்டரி அவிநாசி நெக்ஸ்ட் ஜெனரேஷன் இணைந்து 'தேடல் - மெகா வழிகாட்டி 2026' நிகழ்ச்சியை துவக்கினர்.

அவிநாசி, பழனியப்பா இன்டர்நேஷனல் பள்ளியில், நேற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி பேசியதாவது:

பிளஸ் 2 மாணவர்கள் என்ன படிக்க வேண்டும் என அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும், சமூக வலைதளங்களில் வரும் இன்ப்ளுயன்சர்கள் சொல்லும் கல்லுாரிகளில் சேர்ந்து கல்வி வாழ்க்கையைவீணடிக்க கூடாது.

மீன் வளம், கால்நடைத்துறை சிறந்த படிப்புகள். இன்னும் 6 ஆண்டு காலத்தில், மிக சிறந்த படிப்பு தளமாக, உணவு சார்ந்த படிப்புகளும், விவசாயம் சார்ந்த படிப்புகளும்விளங்கும்.

கொரோனா தொற்றுக்குப் பிறகு இளம் வயதினரிடம் மாரடைப்பு அதிகரித்துள்ளது. உணவு, ஆரோக்கியம், விவசாயம் தொடர்பான படிப்புகள் அதிகளவில் தேவைப்படும், தேடப்படும் துறைகளாக விளங்கும். பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள் பெற்றோர்கள் கருத்தையும் தங்கள் சுய அறிவையும் பயன்படுத்தி வாழ்க்கைக்கான பாடப்பிரிவை, கல்லுாரியை தேர்ந்தெடுக்க வேண்டும்.பெற்றோர்களின் சொல், பேச்சு, மதிக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் அவர்களிடம் பொய் பேச கூடாது. மாணவர்கள் முதலில் தங்களை சுய பரிசோதனை செய்ய வேண்டும்.

எந்த துறை நமக்கானது என தேர்வு செய்ய வேண்டும். தரமான கல்லுாரியில் சேர்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேடல் யாரிடம் உள்ளதோ அவர்களே எந்த துறையாக இருந்தாலும் முதன்மையானவர்களாக விளங்குவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

நல்ல நண்பர்கள் அமையணும்! தன்னம்பிக்கை பேச்சாளர் ஈரோடு மகேஷ் பேசியதாவது:

எப்போதும், நம்மை சுற்றிலும் ஊக்குவிக்கும் வகையில் நண்பர்களை பழகி வைத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய பள்ளிப்பருவத்தில் எதை எந்தெந்த அளவில் வைத்துக்கொள்ள வேண்டும் என ஒரு வரைமுறை உள்ளது.

எந்த துறையில் நாம் தொடர்ந்து பயிற்சி எடுக் கின்றோமோ, அந்த துறையில் நாம் முதன்மையானவராக விளங்குவோம். நமக்கான பாதையை நம்மை விட வேறு யாரும் தேர்ந்தெடுத்து சிறந்த வழிகாட்டியாக அமைக்க முடியாது. ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட வகையில் அவரவருக்கென குறிக்கோள்கள் இருக்க வேண்டும்.

அப்படி அமையும் போது தான் அவர்களின் வாழ்க்கை மற்றவர்களிடமிருந்து தனித்து மேம்படும். முதலில் நாம் ஒரு துறையை தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும்.

அந்தத் துறையில் எப்போதும் தனித்துவமாக விளங்குவதற்கான ஆயத்தங்களை நம்முடைய செயல்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

உங்களுடைய கல்வி பாதையில் எந்த இடத்தில் கவனச் சிதறல்கள் ஏற்படுகின்றதோ, அந்த இடத்தில் இருந்து நீங்கள் வெற்றியை இழக்கின்றீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement