மஹா., முதல்வரை பொய் வழக்கில் சிக்க வைக்க சதி; 'மாஜி ' ஐ.பி.எஸ்., மீது வழக்கு பதிய பரிந்துரை

6


மும்பை: மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, பொய் வழக்கில் அவரை சிக்க வைக்க சதி செய்த முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி சஞ்சய் பாண்டே மீது, வழக்குப் பதிவு செய்ய முன்னாள் டி.ஜி.பி., ராஷ்மி சுக்லா மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைத்துள்ளார்.


மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. சிவசேனாவைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்.,கை சேர்ந்த அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாக உள்ளனர். இங்குள்ள தானே போலீஸ் ஸ்டேஷனில், கடந்த 2016ல் வணிக தகராறு தொடர்பாக ஷியாம் சுந்தர் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


அவரின் தொழில்முறை பங்குதாரரான சஞ்சய் புனாமியா அளித்த புகாரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2019ல், சிவசேனாவைச் சேர்ந்த உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தபோது, போலீஸ் டி.ஜி.பி.,யாக இருந்த சஞ்சய் பாண்டே, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டார்.


@quote@தேவேந்திர பட்னவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டேவை சிக்க வைக்க சதி நடந்ததை சர்தார் பாட்டீல் ஒப்புக்கொண்டார்.quote
அப்போது, சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே அமைச்சராகவும், பா.ஜ.,வைச் சேர்ந்த தேவேந்திர பட்னவிஸ் எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தனர். அப்போது சஞ்சய் புனாமியா போலீசில் புதிதாக ஒரு புகாரை அளித்தார். அதில், தன்னை மிரட்டுவதற்கும், தன்னிடம் பணம் பறிப்பதற்கும் மறுவிசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த விவகாரத்தில் தேவேந்திர பட்னவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு தொடர்பிருப்பதாக புகார் எழுந்தது.



கடந்த, 2024ல் இந்த வழக்கை விசாரித்த போலீசார், பொய் வழக்கில் இருவரையும் சிக்க வைக்க முயன்றதாக முன்னாள் டி.ஜி.பி., சஞ்சய் பாண்டே, துணை கமிஷனர் லட்சுமிகாந்த் பாட்டீல், உதவி கமிஷனர் சர்தார் பாட்டீல் உட்பட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.இது தொடர்பான விசாரணையின் போது, தேவேந்திர பட்னவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டேவை சிக்க வைக்க சதி நடந்ததை சர்தார் பாட்டீல் ஒப்புக்கொண்டார். இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்ய போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டதும் உறுதியானது.



இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வு குழு, அது குறித்த அறிக்கையை கடந்தாண்டு டி.ஜி.பி.,யாக இருந்த ராஷ்மி சுக்லாவிடம் சமர்ப்பித்தது.இதையடுத்து, பொய் வழக்கில் தேவேந்திர பட்னவிஸ், ஏக்நாத் ஷிண்டே ஆகியோரை சிக்க வைக்க சதி செய்த வழக்கில் முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி சஞ்சய் பாண்டே உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய ராஷ்மி சுக்லா பரிந்துரைத்தார்.



கடந்த 3ம் தேதி, பணியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், அதற்கு முன்னதாகவே இந்த பரிந்துரை கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அவர் அனுப்பி வைத்தார். இந்த விவகாரம் மஹாராஷ்டிரா சட்டசபையில் நேற்று எதிரொலித்தது.


அப்போது பேசிய பா .ஜ., - எம்.எல்.ஏ., அமீத் சடம், “உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்த 2019 - 22ம் காலக்கட்டத்தில், மஹாராஷ்டிராவில் ஒரு அராஜக சூழல் நிலவியது. அவரை எதிர்ப்பவர்கள் சிறையில் தள்ளப்பட்டனர். ' 'அரசுக்கு எதிராக பேசியவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. போலீசார் மூலம் கொலைகள் அரங்கேறின. இந்த காலக்கட்டத்தில் நடந்த அநியாயங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்,” என்றார்.

Advertisement