மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என தீர்ப்பு கூறி நீதிபதி எல்லை மீறியுள்ளார்: மதுரையில் வைகோ குற்றச்சாட்டு

7

மதுரை: ''திருப்பரங்குன்றத்தில் மலை உச்சியில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டு, ஒரு நீதிபதி எல்லை மீறியுள்ளார்,'' என, மதுரையில் ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார்.

திருச்சியில் ஜன., 2ல் துவங்கிய வைகோவின் சமத்துவ நடைப்பயணம் மதுரையில் நேற்றிரவு நிறைவுற்றது. இதன் பின் எம்.எல்.ஏ., பூமிநாதன் தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில் வைகோ பேசியதாவது:

போதையின் பிடியில் உள்ள தமிழகத்தை காக்கவும், ஜாதி, மத மோதல்களை தடுக்கவுமே இந்த நடைப்பயணம். பல நடைப்பயணங்களை மேற்கொண்டு முல்லைப்பெரியாறு அணையை பாதுகாத்தது உள்ளிட்ட தமிழக நலன் காக்க காரணமாக இருந்துள்ளேன்.

திருப்பரங்குன்றம் மலையில் தர்கா உள்ளது. 100 ஆண்டுகளாக எந்தபிரச்னையும் இல்லை. ஆனால் மதுரையில் ஒரு நீதிபதி அங்குள்ள மலை மீதுள்ள துாணில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கூறினார். அவர் எல்லை மீறி விட்டார். அவர் உட்பட மூன்று நீதிபதிகளுக்கும் சொல்வேன், நான் எதற்கும் அஞ்சுபவன் அல்ல. துணிச்சலுடன் சொல்கிறேன். மதுரை திருமங்கலத்தில் நான் விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதற்காகவும், இந்திய அரசை குற்றம்சாட்டியதற்காகவும் தேசத் துரோக வழக்கை சந்தித்தேன். என் கருத்துக்களில் உறுதியாக இருப்பேன். தமிழகத்தில் மதவாதக் கொட்டம் ஒடுக்கப்படும்.

தமிழகத்திற்கு சமீபத்தில் வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா, தி.மு.க.,வை துடைத்து எறிவோம் என்கிறார். அவருக்கு என்ன திமிர், ஆணவம் இருந்தால் அவ்வாறு பேசியிருப்பார். தி.மு.க., எக்கு கோட்டை. இதை யாராலும் அழிக்க முடியாது. திராவிட கழகத்திற்கு ஆபத்து வரும்போது நான் பக்கபலமாக இருப்பேன்.

ஆட்சியில் பங்கு கேட்கவில்லை. வைகோவிற்கு பதற்றம் என்கின்றனர். இதுகுறித்து கிண்டல் செய்கின்றனர். அதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன். தமிழக மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை ம.தி.மு.க., நிறைவாக செய்துள்ளது என்றார்.

முதன்மை செயலாளர் துரை எம்.பி., பேசுகையில், ''174 கி.மீ.,துாரத்திற்கு 11 நாட்கள் வைகோ நடந்துள்ளார். பூஜை, தொழுகை, ஜெப கூட்டங்கள் போல் பிறர் மனதை புண்படுத்தாமல் பகுத்தறிவு பிரசாரங்களும் நடக்க வேண்டும்,'' என்றார்.

பாடலாசிரியர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ், மார்க்சிஸ்ட் எம்.பி., வெங்கடேசன், தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் தளபதி எம்.எல்.ஏ., மணிமாறன் உள்ளிட்ட தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். ம.தி.மு.க., நகர் செயலாளர் முனியசாமி நன்றி கூறினார்.

Advertisement