ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுக்கலாமே; தெருநாய்கள் தொடர்பான வழக்கில் வக்கீலுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி சூடு

21

நமது டில்லி நிருபர்





தெருநாய்கள் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, தெரு நாய்களை தத்தெடுப்பதற்கான தேசிய கொள்கையை வலியுறுத்திய வக்கீலை சுப்ரீம்கோர்ட் நீதிபதி மேத்தா தலைமையிலான அமர்வு கடுமையாக சாடி உள்ளது. மேலும் தெருக்களில் உள்ள அனாதை குழந்தைகளை ஏன் தத்தெடுக்க கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.


தலைநகர் டில்லியில், தெரு நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில், இது தொடர்பாக, சுப்ரீம்கோர்ட் தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு முன் நடந்து வருகிறது. இந்த வழக்கு இன்று (ஜனவரி 13) மீண்டும் விசாரணைக்கு வந்தது.


அப்போது நாய் பிரியர் ஒருவரின் சார்பாக ஆஜரான வக்கீல் ஒருவர், '' டில்லியில் 200 தெருநாய்கள் பராமரிக்கும் 80 வயது மூதாட்டி சார்பாக வாதிடுகிறேன். டில்லியில் நாய் அம்மா என்று மூதாட்டி அழைக்கப்பட்டு வருகிறார். தெரு நாய்களை தத்தெடுப்பதற்கான தேசிய கொள்கை கொண்டு வர பரிசீலிக்க வேண்டும்.


வீட்டில் 8-10 நாய்களை வைத்திருக்கும் பலர் இருக்கின்றனர். அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கலாம். ஊக்கத்தொகை கருத்தடை மற்றும் தடுப்பூசி போன்ற செலவுக்கு பயன்படும்'' என வாதிட்டார்.


இதற்கு, தெருக்களில் உள்ள அனாதை குழந்தைகளை தத்தெடுக்கலாமே? என வக்கீலை நீதிபதிகள் கடுமையாக சாடினர். அப்போது நீதிபதி சந்தீப் மேத்தா கூறியதாவது: 2011 ம் ஆண்டு நீதிபதியாக நான் பதவி உயர்வு பெற்றதிலிருந்து, இவைதான் நான் கேட்ட மிக நீண்ட வாதங்கள். இதுவரை யாரும் மனிதர்களுக்காக இவ்வளவு நீண்ட நேரம் வாதிட்டதில்லை.


தெருநாய்கள் தொடர்பான வழக்கில் நாய் பிரியர்களின் சார்பாக பல வக்கீல்கள் வாதாடினர். ஆனால் மனிதர்கள் சார்பாக யாரும் வாதிடவில்லை, கருத்துக்களை முன்வைக்கவில்லை, என்றார்.

உத்தரவு



மேலும், ''எந்தவொரு குழந்தைக்கோ அல்லது முதியவருக்கோ நாய் கடித்து காயம் அல்லது மரணம் அடைந்த பிறகும், எந்த நடவடிக்கையும் எடுக்காத மாநிலங்கள் இழப்பீடு தொகை செலுத்த வேண்டும். தெருநாய்களுக்கு உணவளிப்பவர்கள் பொறுப்பேற்க வேண்டும்'' என சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Advertisement