இந்திய பிரிக்ஸ் தலைமைத்துவ லோகோ, பிரத்யேக இணையதளம் வெளியீடு

புதுடில்லி: 2026ம் ஆண்டு பிரிக்ஸ் மாநாட்டுக்கான லோகோ, மையக்கருத்து, பிரத்யேக இணையதளத்தை, டில்லியில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று (ஜனவரி13) வெளியிட்டார்.

பிரிக்ஸ் என்பது இந்தியா, பிரேசில், சீனா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளைக் கொண்ட கூட்டமைப்பாகும்.
இதன் நடப்பாண்டுக்கான தலைமை பொறுப்பு இந்தியா வசம் வந்துள்ளது. அதன்படி அமைப்பின் உச்சி மாநாட்டை இந்தியா தலைமை வகித்து நடத்துகிறது.
இந்த மாநாட்டுக்கான லோகோ, இணையதளம், கருப்பொருள் அறிமுக விழா டில்லியில் நடைபெற்றது.

இந்த விழாவில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், சர்வதேச அமைப்புகள், இந்திய அரசு அதிகாரிகள் மற்றும் சிந்தனையாளர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டு, லோகோ, இணையதளம் ஆகியவற்றை வெளியிட்டார்.


இந்த ஆண்டிற்கான இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் மையக்கருத்து, "தாங்குதிறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான உருவாக்கம்" என்பதாகும். இது பிரதமரின் "மனிதநேயத்திற்கு முன்னுரிமை மற்றும் மக்கள் மையக் கொள்கை" என்ற தொலைநோக்குப் பார்வையை அடிப்படையாகக் கொண்டது.இந்த லோகோ உள்ளடக்கம், உரையாடல் மற்றும் பகிரப்பட்ட வளர்ச்சியை அடையாளப்படுத்துகிறது.


இதில் உள்ள இதழ்கள் அனைத்து பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் துடிப்பான வண்ணங்களை பிரதிபலிக்கின்றன, இது கூட்டு வலிமை மற்றும் ஒற்றுமையைக் குறிக்கிறது.மையத்தில் உள்ள "நமஸ்தே" முத்திரை, மரியாதை, அரவணைப்பு மற்றும் இணக்கமான ஒத்துழைப்பை வெளிப்படுத்துகிறது.


இது பாரம்பரியத்தையும் நவீனத்தையும் இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவம் குறித்த தகவல்களைப் பகிரும் தளமாக brics2026.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

Advertisement