வங்கதேசம் மீண்டும் மறுப்பு * நீடிக்கும் உலக 'டி-20' குழப்பம்

தாகா: 'இந்தியாவில் வர மறுத்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்,' என்ற ஐ.சி.சி., கோரிக்கையை ஏற்க, வங்கதேசம் மறுத்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான மனநிலை வங்கதேசத்தில் காணப்படுகிறது. இதனால் இந்திய கிரிக்கெட் போர்டு 'அட்வைஸ்' படி பிரிமியர் தொடரில் (2026) பங்கேற்க இருந்த வங்தேச வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிஜுர் ரஹ்மான், கோல்கட்டா அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இதற்கு பதிலடியாக இந்தியாவில் நடக்க உள்ள 'டி-20' உலக கோப்பை தொடரில் (பிப்.7-மார்ச் 8, 2026) பங்கேற்க வங்கதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) மறுக்கிறது. தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்றும்படி, பலமுறை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.,) கடிதம் எழுதியது.
ஆனால், பிப். 7ல் தொடர் துவங்க உள்ளது. அட்டவணை இறுதி செய்யப்பட்ட நிலையில், போட்டிகளை மாற்ற, ஐ.சி.சி., தயக்கம் காட்டி வருகிறது. தவிர, முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டது.
ஆனால் பி.சி.பி., தனது முடிவில் உறுதியாக உள்ளது. இதுகுறித்து வெளியிட்ட செய்தியில்,' வங்கதேச வீரர்கள், பயிற்சியாளர்கள் நலன்களை பாதுகாப்பதில் பி.சி.பி., உறுதியாக உள்ளது. இதுகுறித்து ஐ.சி.சி.,யுடன் நடந்த காணொலி கூட்டத்தில், இந்தியா வர முடியாது என்பதை மீண்டும் வலியுறுத்தினோம்,' என தெரிவித்துள்ளது.

Advertisement