அமெரிக்காவை விட டென்மார்க்கே மேல்; கிரீன்லாந்து பிரதமர் திட்டவட்டம்

1

நுாக்: அமெரிக்கா அல்லது டென்மார்க் ஆகிய இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், டென்மார்க்கையே தேர்ந்தெடுப்போம் என்று கிரீன்லாந்து பிரதமர் திட்டவட்டமாக மீண்டும் அறிவித்துள்ளார்.


ஆர்டிக் பகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய தீவான கிரீன்லாந்து, ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் தன்னாட்சி பிரதேசமாக உள்ளது. கிரீன்லாந்தை சுற்றியுள்ள கடல் பகுதிகள் தற்போது ரஷ்யா, சீன கப்பல்களால் நிரம்பியுள்ளதால், தங்கள் நாட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வருகிறார்.


இதனால் கிரீன்லாந்தை, தங்கள் நாட்டின் 51வது மாகாணமாக இணைக்கும் மசோதாவையும் அவர் தாக்கல் செய்துள்ளார். டிரம்பின் நெருக்கடிக்கு மத்தியில், கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ் பிரெடெரிக் நீல்சன், அதிரடியாக பதில் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், நாங்கள் இப்போது ஒரு புவிசார் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளோம். அமெரிக்கா மற்றும் டென்மார்க் ஆகிய இருநாடுகளில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், டென்மார்க்கையே தேர்ந்தெடுப்போம்.


நாங்கள் நேட்டோவையும், ஐரோப்பிய யூனியனையும் விரும்புகிறோம். ''ஆனால், கிரீன்லாந்தை ஒருபோதும் அமெரிக்கா ஆள்வதை விரும்பவில்லை. அமெரிக்காவின் ஒரு பகுதியாக இருக்கவும் விரும்பவில்லை, என்று தெரிவித்துள்ளார்.


இதற்கு பதிலளித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், கிரீன்லாந்தை, ஏதாவது ஒரு வழியில் கட்டுக்குள் கொண்டு வருவேன். இதை தடுத்தால் அது அவர்களுக்கு பெரிய பிரச்னையாக இருக்கும், என்று எச்சரித்துள்ளார்.

Advertisement