அமெரிக்காவில் 2 மகன்கள் கொலை இந்திய வம்சாவளி தாய் கைது

நியூஜெர்சி: அமெரிக்காவின் நியூஜெர்சியில் தன் இரு மகன்களை கொலை செய்த இந்திய வம்சாவளி தாயை, போலீசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹில்ஸ்பரோ பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி பிரியதர்ஷினி, 35. இந்திய வம்சாவளியினரான இந்த தம்பதிக்கு, 7 மற்றும் 5 வயதில் இரு மகன்கள் இருந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிய நடராஜன், வீட்டின் படுக்கை அறையில் தன் இரு மகன்களும் மயக்கமான நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்; இது குறித்து போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அந்த தம்பதியின் இரு மகன்களும் இறந்ததை உறுதி செய்தனர்.

இதையடுத்து, தாய் பிரியதர்ஷினியை கைது செய்த போலீசார், அவர் மீது கொலை மற்றும் சட்டவிரோதமாக ஆயுதத்தை வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இரு மகன்களையும் தாய் கொலை செய்தது ஏன் என்பது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement