'அ.தி.மு.க.,வுக்கு ஒத்து ஊதிட்டாரே!'

1

ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய பா.ஜ., அரசு மற்றும் அதற்கு ஒத்து ஊதும் அ.தி.மு.க.,வை கண்டிப்பதாக கூறி, விருதுநகர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., சீனிவாசன் தலைமையில், 'இண்டி' கூட்டணி சார்பில், சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் பேசிய, மா.கம்யூ., கட்சியின் விருதுநகர் மாவட்ட செயலர் சமுத்திரம், 'ஏழைகள் பயன் பெறும், 100 நாள் வேலை திட்டத்துக்கு நிதி ஒதுக்காமல், மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி, தேன்கூட்டில் கல் எறிந்துள்ளது மத்திய அரசு. இதை எதிர்க்காமல், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி வேடிக்கை பார்க்கிறார். வரும் தேர்தலில், நிச்சயம் பழனிசாமியின் ஆட்சி மலர்ந்தே தீரும்' என்றார்.

இதைக் கேட்டு கூட்டத்தினர் அதிர்ச்சியடைந்த நிலையில், 'ஸ்டாலின் ஆட்சி மலர்ந்தே தீரும்' என, சுதாரித்துக் கொண்டார் சமுத்திரம்.

கூட்டத்தில் நிருபர், ஒருவர், 'தி.மு.க.,விடம் மா.கம்யூ., அடிமையாக இருப்பது பிடிக்காமல், அ.தி.மு.க.,வுக்கு ஒத்து ஊதிட்டாரு போலும்' என கூற, சக நிருபர்கள் சிரித்தனர்.

Advertisement